தமிழகத்திற்கு மட்டும் ஒரு நீதியா?-ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil


சென்னை:

உச்சநீதிமன்றங்களை பிற மாநிலங்கள் பலமுறை புறக்கணித்த, அமல்படுத்த மறுத்த சம்பவங்கள் உதாரணங்களாக இருக்கும்போது தமிழக அரசை மட்டும் உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருப்பது சரியல்ல என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில், பொது வேலை நிறுத்தம் செய்ய தடை விதிக்கப்படுவது குறித்து நாடு முழுவதும் பொது விவாதம் நடத்தி பொதுக் கருத்து உருவாக்கப்பட வேண்டும். வேலை நிறுத்தத்துக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்த நிலையில், அந்த முடிவை மாற்றிக் கொண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் தானாகவே முன்வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்றுள்ளார்கள். மக்களின் இந்தப் போராட்டத்தை அரசியல் சட்ட முறிவு என்றோ, சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்றோ எடுத்துக் கொள்ளக் கூடாது.

நீதிமன்றங்களின் உத்தரவுக்கு கீழ்படிய வேண்டும் என்பது பொதுவிதி. இது மதிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இதனை சில குறிப்பிட்ட சம்பவங்களுக்கு மட்டுமே வலியுறுத்துவது என்பது சரியல்ல.

கர்நாடகம் மதிக்கவில்லை ..

3 நீதிபதிகளைக் கொண்ட காவிரி நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தபோது, அதனை கர்நாடக அரசு ஏற்கவில்லை. நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு சரியானதுதான் என்று உச்சநீதிமன்றமும் அறிவித்தது. ஆனால் கர்நாடக அரசு இறுதிவரை அந்த உத்தரவுக்குக் கட்டுப்படாமல் நீதித்துறையை அவமதித்தது. நீதித்துறை உத்தரவுக்குக் கட்டுப்படாத கர்நாடகத்தின் இந்தப் போக்கு கண்டிக்கப்படவில்லை.

உ.பி. மதிக்கவில்லை ..

அயோத்தி கரசேவை குறித்த நீதிமன்ற உத்தரவை உத்தரப்பிரதேசத்தில் அன்றைக்கு இருந்த பாரதிய ஜனதா அரசு செயல்படுத்தவில்லை. அதற்காக பாரதிய ஜனதா அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய ஒருமைப் பாட்டுக்குழுக் கூட்டத்தில் வி.பி.சிங்கும், பிற தலைவர்களும் வலியுறுத்தினர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஜெயலலிதா, நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்படியாத உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா அரசைக் கவிழ்க்க வேண்டும் என்று பயமுறுத்துவது சரியல்ல என்று அந்தக் கூட்டத்தில் வாதாடியிருக்கிறார்.

நீதிமன்ற உத்தரவிற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்கிற பொது விதியை, குறிப்பிட்ட சம்பவங்களுக்கு மட்டுமே வலியுறுத்துவது சரியல்ல என்று அன்றைக்கே ஜெயலலிதா சுட்டி காட்டியிருக்கிறார்.

ஜெ.வுக்கு என்ன தகுதி இருக்கிறது ..?

அயோத்தி கரசேவைப் பிரச்சனை சர்ச்சையில் இருந்த பாரதிய ஜனதா அரசுக்காக ஜெயலலிதா வாதாடியிருப்பது அன்றைக்கு மட்டுமல்ல. என்றைக்கும் பொருந்தும். அன்று இப்படியெல்லாம் பேசியிருப்பதை ஜெயலலிதாவும், அவருக்கு ஆதரவான சக்திகளும் இப்போது மறந்திருக்கலாம்.

எனவே, அவருக்கும் மற்றவர்களுக்கும் நினைவுபடுத்துவது தவறல்ல. இப்போது தமிழக அரசுக்கு எதிராக குரல் எழுப்பவோ, கோரிக்கை வைக்கவோ, அவருக்கு எந்தத் தகுதியும் இருக்க நியாயமில்லை.

கேரளாவும் மதிக்கவில்லை ..

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தலைமை நீதிபதியின் தலைமையிலான உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதற்கு கேரள மாநில அரசு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்று வரையில் இந்த தீர்ப்பை கேரள அரசு செயல்படுத்த முயலவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தொடர்ந்து கட்டுப்பட மறுத்து வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

மக்கள் ஏற்க மாட்டார்கள் ..

எனவே, நீதிமன்றங்களின் உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற பொது விதியை குறிப்பிட்ட சம்பவங்களுக்கு மட்டுமே வலியுறுத்துவது என்பது சரியாக இருக்காது. அதனை மக்கள் மன்றம் ஏற்றுக் கொள்ளாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+