இரு சாலை விபத்தில் 5 பேர் பலி
தர்மபுரி:
தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களித்தில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துக்களில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் உள்ள நாகச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (32). இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் ஓகேனக்கலுக்கு சுற்றுலா சென்றார்.
இவர்களுடைய கார் நேற்று காலை தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சென்றபோது, குல்லாத்திரம்பட்டி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து தெருக்குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த கோகிலா (20), மீனா(13) மற்றும் காரில் வந்த ஆனந்தகுமார் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் வீரமணி (25) என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் அருகே இருவர் பலி:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகில் உள்ள சூரியகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம்(36). இவர் தனது நண்பர் விஜயகுமாருடன்(28) திருச்சியிலிருந்து நேற்று அதிகாலை காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
நாமக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் வேப்பநத்தம் அருகே வந்தபோது, பெங்களூரிலிருந்து திருச்சி சென்ற லாரி, கார் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் காரில் பயணம் செய்த சதாசிவம், விஜயகுமார் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்துகள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications