காவல்நிலையத்தை முற்றுகையிட்டு முஸ்லீம்கள் போராட்டம்
செங்கோட்டை:
செங்கோட்டை காவல்நிலையத்தை முஸ்லீம்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள இரவியதர்மபுரம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் இஸ்லாமிய மக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர்.
வடக்கு தெரு பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதி அப்பகுதி பள்ளிவாசலுக்கு சொந்தமான நிலம் என்று அப்பகுதியினை சேர்ந்த மைதீன் பிச்சை, ஜலாலுதீன், செய்யது சுலைமான், முகைதீன் பிச்சை உள்ளிட்டோர் அந்த 50 குடும்பத்தினரை காலி பண்ணச் சொல்லி வற்புறுத்தி வருகின்றனராம்.
இது குறித்து கிராம மக்கள் முதல்வர் உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பியும், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
மேலும் அப்பகுதி இளைஞர்கள் வடக்கு தெருவில் வசிக்கும் பெண்களை அவதூறாக பேசி வருவதாகவும், வீடுகளை தீ வைத்து விடுவதாக கூறி வருவதாகவும் தங்கள் வசிக்கும் நிலம் கேரளாவோடு தமிழகம் இணைந்திருந்தபோது மன்னர் இலவசமாக வழங்கியதாகவும் அந்த இடத்தை தற்போது ஜமாத் முக்கியஸ்தர்கள் காலி செய்ய கூறி மிரட்டி வருவதாகவும் கூறி செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்ய 100க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
அப்போது இன்ஸ்பெக்டர் ஜெயசுப்பிரமணியன் ஜமாத் பிரமுகர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தங்களை மிரட்டுவதாகவும் கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்தனர்.