குமாரசாமி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தர காங். முடிவு?
பெங்களூர்:
கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தர காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. சோனியா காந்தி அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
ஒப்பந்தப்படி ஆட்சியை ஒப்படைக்க மதச்சார்பற்ற ஜனதாளம் முரண்டு பிடித்ததால், கடுப்பான பாஜக தனது அமைச்சர்கள் 17 பேரையும் ராஜினாமா செய்ய வைத்து குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
அடுத்தகட்டமாக ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவையும் வாபஸ் பெறத் திட்டமிட்டுள்ளது பாஜக. இதுதொடர்பான முடிவு இன்று இரவுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் குமாரசாமி அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெளடவும், முதல்வர் குமாரசாமியும், காங்கிரஸ் கட்சியின் உதவியை நாடியுள்ளனர்.
இதுதொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களை குமாரசாமியும், மேலிடத் தலைவர்களை கெளடாவும் தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
குமாரசாமி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கக் கூடும் எனத் தெரிகிறது. அதே சமயம், ஆட்சியில் பங்கு பெறாமல், வெளியிலிருந்துபடி ஆதரவு தரும் எனத் தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். நாளை அவர் நாடு திரும்புகிறார். அவர் வந்த பிறகு காங்கிரஸ் கட்சியின் திட்டம் குறித்துத் தெரிய வரும்.
இதே காங்கிரஸ் தலைமையிலான அரசைக் கவிழ்த்து விட்டுத்தான், பாஜகவுடன் கை கோர்த்து ஆட்சியமைத்தார் குமாரசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதே காங்கிரஸின் உதவியை மதச்சார்பற்ற ஜனதாதளம் நாடியுள்ளதை பெரும் கேலிக்கூத்தாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications