பவானி ஆற்றில் படகு மூழ்கி 5 பேர் பலி
கோவை:
கோவை மாவட்டம் காரமடை அருகே பவானி ஆற்றில் படகு மூழ்கி அதில் பயணம் செய்த கணவன், மனைவி உள்ளிட்ட 5 பேர் பலியானார்கள்.
காரமடை அருகே உள்ள காளியூர் கிராமத்தில் ஆதிவாசிகள் வசிக்கிறார்கள். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த செல்லான் என்பவருக்கும், அவரது மனைவி ராஜாமணிக்கும் கல்யாணமாகி பல வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறந்தது.
இதையடுத்து பில்லூர் அணைப் பகுதியில் உள்ள தோண்டை கிராமத்தில் உள்ள தங்களது குல தெய்வமான பத்ரகாளியம்மனுக்குப் பொங்கல் வைத்து சாமி கும்பிட முடிவு செய்தனர்.
இதையடுத்து செல்லான் (35), ராஜாமணி (28), தங்கை வசந்தா (17), நீலன் (60), அவரது மனைவி காளியம்மாள் (45), நஞ்சப்பன் (22), அவரது மனைவி நஞ்சம்மாள் ஆகியோர் கிளம்பினர்.
நேற்று பிற்பகலில் தோண்டையில் உள்ள கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்ட அவர்கள் மாலையில் ஊர் திரும்ப பவானி ஆற்றைக் கடக்க பரிசலில் பயணப்பட்டனர். படகில் ராஜேந்திரன் என்பவரும் ஏறியிருந்தார்.
ஆற்றின் நடுவே படகு சென்றபோது திடீரென பரிசலில் ஓட்டை விழுந்தது. இதனால் ஆற்று நீர் பரிசலுக்குள் புகுந்து அதை அமுக்கியது.
இதனால் பரிசலில் இருந்தவர்கள் பயத்தில் அலறினர். படகில் இருந்த அனைவருமே சில நிமிடங்களில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் செல்லான், ராஜாமணி, நஞ்சப்பன், வசந்தா, நீலன் ஆகியோர் உயிரிழந்தனர்.
செல்லானின் ஒன்றரை வயதுக் குழந்தையை ராஜேந்திரன் தனது கையால் பிடித்து தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு நீந்தினார். அவர்களுடன் நஞ்சம்மாளும், காளியம்மாளும் சிரமப்பட்டு நீந்தி கரையை சேர்ந்தனர்.
பின்னர் கரை ஏறிய அவர்கள் கிராம மக்களிடம் தகவலைக் கூறினர். போலீஸாருக்கும் தகவல் போனது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்தனர். ஆற்றில் மூழ்கியவர்களின் உடல்களைத் தேடும் பணியில் இறங்கினர்.ஆனால் இரவு வரை ஐந்து பேரின் உடல்களும் கிடைக்கவில்லை.
4 உடல்கள் கரை ஒதுங்கின:
இந் நிலையில் நால்வரின் உடல்கள் இன்று காலை பவானி ஆற்றின் கரையோரத்தில் ஒதுங்கின.
பலியான ராஜாமணியின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.