ஹோட்டல் அதிபரின் பேரன் கடத்திக் கொலை
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பிரபல ஹோட்டல் அதிபரின் பேரனை, கடத்திக் கொன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். வேலையை விட்டு ஹோட்டல் அதிபர் நீக்கியதால் ஆத்திரமடைந்து சிறுவனைக் கொன்றுள்ளார் அந்த வாலிபர்.
கும்பகோணத்தில் ஹோட்டல் வைத்திருப்பவர் முத்துகிருஷ்ணன். இவரது ஹோட்டலில் வேலை பார்த்து வந்த காந்தி என்பவரை, சமீபத்தில் வேலையை விட்டு நீக்கி விட்டார் முத்துக்கிருஷ்ணன்.
இந்த நிலையில் கடந்த மாதம் உடல் நலக்குறைவால் இறந்தார் முத்துக்கிருஷ்ணன். நேற்று 41வது நாள் காரியம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முத்துக்கிருஷ்ணனின் மகள் கவிதா, தனது கணவர், குழந்தை விவேக் (7) ஆகியோருடன் வந்திருந்தார்.
தாத்தா வீட்டுக்கு வந்த விவேக், பின்னர் உப்புக்காரத் தெருவில் உள்ள தனது சித்தி வீட்டுக்குப் போனான். அங்கு வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென அவனைக் காணவில்லை. இதையடுத்து அனைவரும் சேர்ந்து தேடிப் பார்த்தனர். ஆனால் விவேக் எங்கும் கிடைக்கவில்லை.
இதையடுத்து கவிதாவின் அண்ணன் சரவணன், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காந்திதான் இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என புகாரில் சந்தேகம் தெரிவித்திருந்தார் சரவணன். இதையடுத்து போலீசார் காந்தியைத் தேடத் தொடங்கினர். இதில் திருவாரூரில் சிக்கினார் காந்தி.
அவரை கும்பகோணம் கொண்டு வந்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. வேலையிலிருந்து நீக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த காந்தி, முத்துக்கிருஷ்ணனின் பேரனைக் கடத்திச் சென்றுள்ளார். சைக்கிளில் அவனைக் கூட்டிச் சென்றுள்ளார். அப்போது விவேக் தவறி கீழே விழுந்துள்ளான்.
அதில் அவனது தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவன் மயங்கியுள்ளான். இதைப் பார்த்த காந்தி, சிறுவன் இறந்து விட்டதாக நினைத்து, சாக்கோட்டை அருகே உள்ள கால்வாயில் வீசி எறிந்து விட்டுப் போய் விட்டார் காந்தி.
இந்தத் தகவல்களை காந்தியிடமிருந்து பெற்ற போலீஸார் உடனடியாக அங்கு விரைந்தனர். கால்வாயில் மிதந்தபடி இருந்த சிறுவன் விவேக்கின் உடலை மீட்டனர். காந்தி கைது செய்யப்பட்டார்.
பழிக்குப் பழி வாங்குவதற்காக ஹோட்டல் அதிபரின் பேரனைக் கடத்திக் கொலை செய்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.