இராக்கை பிரிக்க அனுமதிக்க மாட்டோம்: குவைத்
துபாய்:
இராக்கைப் பிரிக்க குவைத் ஒருபோதும் அனுமதிக்காது என்று குவைத் ஆட்சியாளரான ஷேக் சபா அல் அகமது அல் சபா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், இராக்கை நாங்கள் பிரிக்க அனுமதிக்க மாட்டோம். இதை நாங்கள் மிகவும் அபாயகரமானதாக கருதுகிறோம். இது இந்தப் பிராந்தியத்திற்கும் நல்லதல்ல.
இராக்கை பிராந்திய ரீதியாக பல பிரிவுகளாகப் பிரிப்பது குறித்து அமெரிக்க செனட் சபையில், பரிந்துரைக்கப்பட்டதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இதற்கு எங்களது முழு எதிர்ப்பைத் தெரிவிப்போம். இராக்கியர்களும் கூட இதை ஏற்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
இராக்கில் படைகளை விலக்கிக் கொள்ளும்படி இப்போது கூறுவது சரியாக இருக்காது. நாளையே வாபஸ் வாங்குங்கள் என்று நான் கூறலாம், அவர்களும் கூட வாபஸ் பெறலாம். ஆனால் அதன் பின்னர் அங்கு அமைதி திரும்பி விடும், இயல்பு நிலை திரும்பி விடும் என்று உறுதியாக கூற முடியுமா, நான் அப்படி நினைக்கவில்லை என்றார் அவர்.
இராக்கில் பெரும்பாலாக வசிப்பவர்கள் ஷியா பிரிவினர் ஆவர். இராக்கை பிரித்தால் ஷியாக்களுக்கும் ஒரு நாடு உருவாகி, அந்த நாடு ஈரானுக்கு நெருக்கமாகும் சூழல் ஏற்படுவதை எந்த வளைகுடா நாடும் விரும்பவில்லை.