எம்.பியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
செங்கோட்டை:
செங்கோட்டை ரயில் நிலையத்தினை ஆய்வு செய்ய வந்த தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாதுரையிடம் வீட்டு மனை பட்டா கேட்டு அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
செங்கோட்டை-தென்காசி இடையே 7 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்று பல மாதமாகியும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரி வந்து சோதனை செய்யாத காரணத்தினால் பொதிகை ரயில் தற்போது தென்காசியில் இருந்தே இயக்கப்படுகிறது.
இந்நிலையில் செங்கோட்டை ரயில் நிலையத்தினை ஆய்வு செய்ய தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்பாத்துரை வந்தார்.
ரயி்ல்வே பணிகளை பார்வையி்ட்ட பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது, இந்த பணிகள் தாமதம் ஆனதற்கு பல நிர்வாக காரணங்கள் உள்ளன. மேலும் சில சக்திகள் செங்கோட்டையிலிருந்து ரயிலை இயக்கவிடாமல் தடுத்து வருகின்றன.
தேர்தலில் நான் கொடுத்த வாக்குறுதிபடி செங்கோட்டையிலிருந்து பொதிகை ரயிலை இயக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.
அப்போது அப்பகுதியில் குடியிருக்கும் சிலர் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வேண்டும் என்று கூறி அவரை முற்றுகையிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த எம்.பி வேகமாக புறப்பட்டு சென்று விட்டார்.
ரயில் பணிகள் குறித்து போராட்டகுழு தலைவரும் அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன், மதிமுக நகர செயலாளர் சங்கரன், தேமுதிக மாவட்ட இணைச் செயலாளர் கண்ணன், வர்த்தக சங்க தலைவர் முத்துசாமி ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது,
செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்குவது இம்மாத இறுதிக்குள் தொடங்காவிடில் பொதுமக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம். எம்.பி உறுதியான தகவலை கூறாமல் மழுப்பலான பதிலை தெரிவித்து விட்டு செல்கிறார். இது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயலாகும். இந்தப் பிரச்சனையில் இறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட தயங்க மாட்டோம் என்றனர்.