மலேசியாவில் இனி ஸ்பாட் விசா கிடையாது
காரைக்கால்:
மலேசிய நாட்டில் விதிமுறைகளை மீறி தங்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், உடனடியாக கொடுக்கப்படும் ஸ்பாட் விசா முறையை ரத்து செய்ய மலேசிய அரசு முடிவு செய்துள்ளதாக காரைக்கால் வந்த அந்நாட்டின் சட்டத்துறை துணை அமைச்சர் எம்.கேவியஸ் கூறியுள்ளார்.
மலேசிய சட்ட அமைச்சர் நேற்று காரைக்காலுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தனியார் அறக்கட்டளை சார்பில் மருத்துவக் கல்லூரி:
புதுவையில் மலேசியாவைச் சேர்ந்த தனியார் அறக்கட்டளை சார்பில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது. அதில் பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்புக் காலத்தில் பாதி காலத்தை மலேசியாவிலுள்ள கல்லூரியிலும் படிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் கலாசார பரிவர்த்தனை ஏற்படும். அதுதவிர இருநாட்டு மருத்துவக் கல்வி நுணுக்கங்களையும் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். இத்தகைய மருத்துவக் கல்லூரியை காரைக்காலிலும் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இருக்கிறது.
மருத்துவர்கள் தேவை அதிகரிப்பு:
மலேசியாவில் மருத்துவர்களுக்கான தேவைகள் அதிமாக உள்ளது. இந்திய மருத்துவர்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு உள்ளது. திறமையான மருத்துவர்கள் முறையான அனுமதியுடன் மலேசியா வருவதை வரவேற்கிறோம்.
சுற்றுலா வளர்ச்சியுற்ற நாடான மலேசியா உதவியுடன் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து புதுவை முதல்வருடன் பேசியுள்ளோம்.
ஸ்பாட் விசா ரத்து:
இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு வருபவர்களில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் விதிகளை மீறி மலேசியாவிலேயே தங்கிவிடுகின்றனர். இதைத் தவிர்க்க மலேசியா வந்தவுடன் பெறக்கூடிய ஸ்பாட் விசா முறையை ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
புதுச்சேரி-கோலாலம்பூர் விமான சேவை:
புதுச்சேரியிலிருந்து கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவை துவக்கப்பட உள்ளது. மேலும் காரைக்காலிலும் விமான தளம் அமைக்க இருப்பதாக புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். காரைக்காலிலும் விமானதளம் அமைந்துவிட்டால் மலேசியாவின் சுற்றுலா வளர்ச்சி இங்கும் விரிவடையும் என்று கேவியஸ் தெரிவித்தார்.