கோவிலில் பெண்ணிடம் பூசாரி சில்மிஷம்-'தப்ப விட்ட' போலீஸ்!
வேலூர்:
சாமி கும்பிட வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பூசாரியை பொதுமக்கள் போலீஸில் பிடித்துக் கொடுத்தனர். ஆனால் அந்தப் பூசாரியை பத்திரமாக வெளியே அனுப்பி வைத்து விட்டு இப்போது 'தீவிரமாக' தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வேலூர் நகரின் மையப் பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சொந்தமானதாகும். இங்கு உதவிப் பூசாரியாக ராம் ஸ்வரூப் தாஸ் என்பவர் இருக்கிறார்.
இவர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த பூசாரியைப் பிடித்து வேலூர் போலீஸில் ஒப்படைத்தனர்.
ஆனால் போலீஸார் பூசாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பத்திரமாக அனுப்பி வைத்து விட்டனராம்.
இந்த நிலையில் பூசாரி குறித்த சர்ச்சை எழுந்ததால் திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து உயர் அதிகாரி நேற்று வேலூர் வந்து கோவிலில் விசாரணை மேற்கொண்டார். இதை அறிந்த பொதுமக்கள் பெரும் திரளாக அங்கு கூடி உயர் அதிகாரியிடம் சரமாரியாக பூசாரி குறித்து புகார் கூறினர்.
இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரி, நிச்சயம் பூசாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் முன்பாகவே பூசாரி பயன்படுத்தி வந்த கோவில் பீரோவைத் திறந்து சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அதில் கத்தை கத்தையாக பணம் இருந்தது. மொத்தம் ரூ. 5 லட்சம் பணம் அதில் இருந்தது. இதைப் பார்த்து அனைவரும் அதிர்ந்தனர்.
மேலும், வங்கிகளில் பூசாரி பல லட்சம் பணத்தை போட்டு வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பீரோவுக்கு சீல் வைக்கப்பட்டது. பூசாரி குறித்து தீவிரமாக விசாரிக்க திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் நிலைமை சிக்கலாவதை உணர்ந்த வேலூர் போலீஸார் தற்போது தலைமறைவாகி விட்ட பூசாரியைத் 'தீவிரமாக' தேடி வருகின்றனராம்.












Click it and Unblock the Notifications