காங். ஆட்சியால் இந்தியா பயங்கரவாத மையமாக மாறி விட்டது - இல.கணேசன்
திருநெல்வேலி:
காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா பயங்கரவாத மையமாக மாறி விட்டது என்று பாஜக மாநில தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இன்று நெல்லை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3,674 பேர் பயங்கரவாத தாக்குதலில் பலியாகியுள்ளனர். இது சமீபத்தில் ஈராக்கில் நடந்த வன்முறை தாக்குதலை விட அதிகமானது. பயங்கரவாத தாக்குதலில் 10 ஆண்டுகளில் 53 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
ஆனால் இந்தியா-பாகிஸ்தான் போரில் இறந்தவர்கள் 8023 பேர். அதைவிட தற்போது அதிகமானோர் பயங்கரவாத தாக்குதலில் பலியாகி வருகின்றனர். இந்திய அரசின் கணக்கெடுப்பின் படி 13 மாநிலங்களில் 103 மாவட்டங்கள் பயங்கரவாத பிடியில் சிக்கியுள்ளது.
இதில் வடக்கு-கிழக்கு மாநிலங்கள், அல் கொய்தா மற்றும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலின் போது தீவீரவாதிகளின் ஆதரவு பெற்றுதான் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்றதில் இருந்து 50 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
அசாம் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரிப்பதற்கான சதி நடவடிக்கை நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ பணியை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இஸ்லாமிய பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. இதனால் தான் தென்காசியில் தொடர் கொலைகள் நடந்துள்ளன.
மனித நீதிப்பாசறை என்ற அமைப்பு திமுகவின் ஆட்சியில் தான் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அதிகளவில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் மத்திய அரசு பயங்கரவாதம், தீவிரவாதத்தை ஓடுக்குவதற்கு பொடா சட்டத்தை நீக்கிவிட்டு சாதாரண சட்டத்தின் முலம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து வருகிறது. தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை பொடா சட்டம் இல்லாமல் தடுக்க முடியாது என்று அவர் கூறினார்.