சேது சமுத்திரத் திட்டம்: ராஜ் டிவியின் சிறப்பு டாக்குமெண்டரி- நாளை ஒளிபரப்பு
திருச்சி:
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான 40 நிமிட டாக்குமென்டரிப் படத்தை ராஜ் டிவி நாளை ஒளிபரப்பவுள்ளது.
திமுகவுக்கும், சன் டிவிக்கும் இடையே பிரச்சினை உருவாகி, இருவரும் பிரிந்த பின்னர் திமுகவுடன், ராஜ் டிவி நெருங்கத் தொடங்கியது. உச்சகட்டமாக ராஜ் டிவி அதிபர் ராஜேந்திரன் தனது சகோதரர்களுடன் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவிலும் இணைந்தார்.
இதையடுத்து ராஜ் டிவியின் ஒளிபரப்பு தரம் தெள்ளத் தெளிவானது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி ஒளிபரப்புக்கான வசதிகளும் மீண்டும் தரப்பட்டன. செய்திகளும் மீண்டும் ஒளிபரப்பாகத் தொடங்கியது.
இந்த நிலையில் நாட்டையே உலுக்கி வரும் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான டாக்குமென்டரிப் படத்தை ராஜ் டிவி தயாரித்துள்ளது. சமுத்திரத்தில் ஒரு சரித்திரம் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த விளக்கப் படம் நாளை முதல் ராஜ் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
நாளை காலை 8 மணிக்கு இந்த விளக்கப் படம் ஒளிபரப்பாகிறது. கடலியல் நிபுணர்கள், நிலவியல் நிபுணர்கள், கடல் உயிரின நிபுணர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசித்து அதன்படி இந்த விளக்கப் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
இந்தப் படத்தை ஜி.எல்.நரசிம்மன் தயாரித்துள்ளார். சர்ச்சைக்குரிய ஆதம் பாலம் (ராமர் பாலம்) குறித்தும், தற்போது நடந்து வரும் கடல் அகழ்வுப் பணகிள் குறித்தும் இந்தப் படத்தில் விளக்கப்பட்டுள்ளது.
மேலும், நாகப்பட்டனம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் கருத்துக்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
கடந்த 24ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது இந்த டாக்குமெண்டரி போட்டுக் காட்டப்பட்டதாம்.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சி தயாரித்துள்ள முதல் விளக்கப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சேது சமுத்திரத் திட்டம் குறித்து பொதுமக்கள் விரிவாக தெரிந்து கொள்ள முடியும் என்று நரசிம்மன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications