இலங்கையில் தமிழர் பகுதிகளில் மனித உரிமை மீறல்: அமெரிக்கா கவலை
வாஷிங்டன்:
இலங்கையில் மனித உரிமைகள் மிகக் கடுமையாக மீறப்பட்டு வருவது பெரும் கவலை தருவதாக அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளியுரழு அமைச்சர் ரோகித பொகோல்லகாமா அமெரிக்கா வந்துள்ளார். பர்ன்ஸை அவர் சந்தித்துப் ேபசினார். முக்கால் மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவது குறித்து ரோகிதவிடம் பர்ன்ஸ் கவலை தெரிவித்தார்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் அப்பாவிகளை (தமிழர்களை) கடத்தும் செயல் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ரோகித, பர்ன்ஸிடம் விளக்கினார். அதை பர்ன்ஸ் வரவேற்றார்.
இருப்பினும் யாழ்ப்பாணம் மற்றும் தமிழர் பகுதிகளில் தொடர்ந்த மிகக் கடுமையான அளவில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவது குறித்து இலங்கை அமைச்சரிடம் அமெரிக்க அமைச்சர் கவலை தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் முழுமையாக தடுக்கப்பட்டிருப்பதற்கும் அவர் கவலை தெரிவித்தார்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களைத் தண்டிக்க இலங்கை அரசு முழுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கை அமைச்சரை அவர் வலியுறுத்தினார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் குறிப்பாக தமிழர் வாழும் பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். இதற்கு இலங்கை ராணுவமும், கருணா குழுவினருமே காரணம் என பரவலாக கூறப்படுகிறது.
குறிப்பாக பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இதை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மனித உரிமை அமைப்புகள் தேவையில்லாமல் இதை ஊதிப் பெரிதாக்குவதாக அவை கூறி வருகின்றன.
ஆனால் தமிழர்கள் தொடர்ந்து கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்தவண்ணம் உள்ளன. மேலும் யாழ்ப்பாணத்தில் அறிவிக்கப்படாத பொருளாதார தடையும் தொடர்ந்து நீடித்து வருகிறது.