பாக். அதிபர் தேர்தல் தொடங்கியது: முஷாரபுக்கு வெற்றி வாய்ப்பு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அதிபர் தேர்தல் இன்று காலை தொடங்கியது. இத்தேர்தலில் பர்வேஸ் முஷாரப் வெற்றி பெறக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
இன்று காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி 10.30 மணி) தேர்தல் தொடங்கியது. இத்தேர்தலில் அந்நாட்டு எம்.பிக்களும், மாகாண சட்டசபை உறுப்பினர்களும் வாக்களிக்கின்றனர். மாலை 3 மணி வரை வாக்குப் பதிவு தொடர்ந்து நடக்கிறது.
ஆளுங்கட்சிக் கூட்டணியின் ஆதரவு மற்றும் பெனாசிர் கட்சியினரின் ஆதரவுடன் முஷராப் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இத் தேர்தலில் பெனாசிர் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். வக்கீல்களும் வேட்பாளரை நிறுத்தியுள்ளனர்.
இன்றைய தேர்தலில் முஷாரப் வெற்றி பெற்றாலும் கூட அவர் பதவியில் நீடிப்பதும், நீடிக்காததும் உச்சநீதிமன்றத்தின் கையில் உள்ளது. காரணம் இது தொடர்பான வழக்கில், வருகிற 17ம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளிக்கவுள்ளது. அப்போதுதான் முஷாரப் அதிபர் பதவியிலும், ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலும் ஒரு சேர நீடிக்க முடியுமா என்பது தெரிய வரும்.
இருப்பினும் உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பைத் தரும் என்று முஷாரப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் முஷாரப் வெற்றி பெற்றால் ராணுவத் தலைமைத் தளபதி பதவியை விட தீர்மானித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, தேர்தலுக்கு முன்பு பெனாசிர் பூட்டோவுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், அவர் மீதான அனைத்து ஊழல் வழக்குகளையும் திரும்பப் பெற நேற்று உத்தரவிட்டார் முஷாரப். இதன் மூலம் பெனாசிர் பூட்டோ மீண்டும் நாடு திரும்ப தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை.
தேர்தலையொட்டி பாகிஸ்தான் முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைநகர் இஸ்லாமாபாத்தின் முக்கிய இடங்களில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications