பொள்ளாச்சியை வஞ்சிக்கும் திமுக அரசு: வைகோ
பொள்ளாச்சி:
கொங்குச் சீமையான பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளை தமிழக அரசு வஞ்சித்து விட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளை மதுரை ரயில் கோட்டத்திலிருந்து பிரித்து பாலக்காடு கோட்டத்திற்குக் கொடுப்பதைக் கண்டித்து மதிமுக சார்பில் பொள்ளாச்சியில் நேற்று பிரமாண்டப் பேரணி நடந்தது.
இதில் வைகோ பேசுகையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளை பாலக்காட்டிற்கு தாரை வார்த்து கொடுத்து தமிழக மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துவிட்டது.
இதற்கு முழு காரணமாக இருந்த மத்திய அரசு மற்றும் தமிழக அரசினை கண்டித்து மதிமுக சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது நம்முடையை உரிமை போராட்டமாகும். கொங்கு சீமையை தமிழக அரசு வஞ்சிப்பது மிகவும் கொடுமையாகும்.
இந்த அநீதியை எதிர்த்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளை மீண்டும் மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து போராடுவேன் என்றார் வைகோ.