மத்திய அரசுக்கு இடதுசாரிகள் இறுதி எச்சரிக்கை
டெல்லி:
இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தில் மத்திய அரசு அடுத்த அடி எடுத்து வைத்தால் ஆதரவை நிச்சயமாக விலக்கிக் கொள்வோம் என இடதுசாரிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதில் ஒரு பகுதியாக சர்வதேச அணு சக்தி ஆணையத்துடன் இந்தியா பேச்சு நடத்த வேண்டும். இந்திய அணு மின் நிலையங்களுக்குத் தேவையான யுரேனியம் கதிரியக்கத் தாதுவை பிற நாடுகளிடம் இருந்து இந்தியா வாங்க இந்த ஆணையத்தின் அனுமதி வேண்டும்.
அவ்வாறு அனுமதி தருவதற்கு இந்த ஆணையம் பல நிபந்தனைகள், விதிகளை வைத்துள்ளது. அதன்படி இந்திய அணு மின் நிலையங்களை இந்த ஆணைய அதிகாரிகள் பார்வையிட அனுமதிக்க வேண்டும்.
இது தொடர்பாக சர்வதேச அணு சக்தி ஆணையத்துடன் பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு துவக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த அமலாக்கம் அடுத்த நிலையை எட்ட உள்ளது.
இந்த ஒப்பந்தத்தையே மிகக் கடுமையாக எதிர்த்து வரும் இடதுசாரிகள், அதை அதிவேகத்தில் மத்திய அரசு அமலாக்க முயல்வதற்கு கடும் கண்டனமும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தை அமலாக்கினால் ஆதரவு நிச்சயமாக வாபஸ் பெறப்படும் என அறிவித்துள்ளனர்.
சர்வதேச அணு சக்தி ஆணையத்துடன் பேச்சு நடத்தக் கூடாது என்றும் கூறியுள்ளனர். ஆனால், இந்த ஆணையத்தின் தலைவர் அல்-பாரடாய் நேற்று இந்தியா வந்தார். அவருடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசப் போகிறோம் என மத்திய அரசு கூறினாலும் அதை இடதுசாரிகள் ஏற்கவில்லை.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களான பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி ஆகியோர் காங்கிரஸ் தலைவர் சோனியா, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்துப் பேசியபோது சமரசம் ஏதும் ஏற்படவில்லை.
அணு சக்தி ஆணையத்துடன் பேச்சு நடத்துவது என்பது அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை அமலாக்கும் செயல் தான் எனக் கூறிவிட்ட காரத், மத்திய அரசு அதைச் செய்தால் ஆதரவு வாபஸ் பெறப்படும் என திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
முன்னதாக அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் இடதுசாரிகளை, தேசத்தின் எதிரிகள் என்று அமெரிக்காவில் வைத்து மறைமுகமாக விமர்சித்தார் சோனியா. இதனால் கொந்தளிப்படைந்த இடதுசாரிகள் நேற்று காங்கிரஸ் கட்சியை தேச விரோத கட்சி என விமர்சித்தனர்.
மேலும் ஆதரவை வாபஸ் பெறுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து இடதுசாரித் தலைவர்களை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நேற்றிரவு சந்தித்துப் பேசினர்.
இந்த பின்னணியில் இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகள் இடையிலான ஒருங்கிணைப்புக் குழுவின் மிக முக்கியக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது.
அதில் இடதுசாரிகள் தங்களது எதிர்ப்பை கடுமையாக எடுத்து வைத்தனர். இதையடுத்து மீண்டும் வரும் 22ம் தேதி கூடிப் பேசுவது என முடிவெடுக்கப்பட்டது. அதுவரை சர்வதேச அணு சக்தி கழகத்துடன் பேச்சு நடத்த மாட்டோம் என இடதுசாரிகளிடம் மத்திய அரசு உறுதிமொழி அளித்துள்ளது. இதன் மூலம் இடதுசாரிகளின் அச்சுறுத்தலுக்கு
காங்கிரஸ் பணிந்துள்ளது.
22ம் தேதி நடக்கும் கூட்டத்தில் காங்கிரஸ் மேலும் இறங்கி வராவிட்டால் இடதுசாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கக் கூடும் என்று தெரிகிறது.
டிசம்பரில் குஜராத் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளதால் அதுவரை இடதுசாரிகள் ஆட்சியை கவிழ்க்க மாட்டார்கள், அதற்குள் அணு சக்தி ஆணையத்துடன் பேச்சுவார்த்தையை தொடங்கிவிடலாம் என காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால், காங்கிரசுக்கு பாடம் புகட்ட இடதுசாரிகள் முடிவு செய்துவிட்டால் எந்த நேரத்திலும் ஆதரவை வாபஸ் பெறலாம் என்ற நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications