நெல்லையில் பிரபல துப்பாக்கி கொள்ளையன் கைது
திருநெல்வேலி:
நெல்லையில் துப்பாக்கியை காட்டி கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா நிருபர்களிடம் கூறியதாவது,
பாளை அருகேயுள்ள திருத்தை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மகன் மணிகண்டன். இவர் தற்போது நெல்லை ஜங்சன் சி.என்.கிராமத்தில் தன்னுடைய தங்கையின் வீட்டில் குடியிருந்து வருகிறார்.
மணிகண்டனும் அவரது நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து கடந்த 2005ல் பாளை பெருமாள்புரம் அருகேயுள்ள ஒரு வீட்டில் பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி, 10 பவுன் நகையையும், பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து நகைகள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் மணிகண்டன் இந்த வழக்கிலிருந்து விடுதலை ஆனார்.
அதன்பிறகு தாழையத்து போலீசார் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஒரு வழக்கு சம்பந்தமாக மீண்டும் மணிகண்டன் உள்பட 4 பேரை கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்து 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்த மணிகண்டன் தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் கன்னியாகுமரி மாவட்டம் தோவளையில் உள்ள நண்பரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை வாங்கி வந்துள்ளார். இந்த துப்பாக்கி மூலம் அப்பகுதிகளில் கொள்ளையடிக்க மணிகண்டன் திட்டமிட்டு இருந்தார்.
இந்நிலையில் களக்காடு அருகேயுள்ள சிங்கிக்குளத்தை சேர்ந்த சுடலைக்கும் மணிகண்டனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நெல்லை ஜங்ஷனுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னர் சுடலை வந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த மணிகண்டன் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்தார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக பாளை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து நெல்லை ஜங்ஷன் போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி கமிஷனர் ஜெயராமன், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ், இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து, மற்றும் போலீசார் சி.என்.கிராமத்தில் வீட்டில் மறைந்திருந்த மணிகண்டனை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, 5 தோட்டாக்கள் மற்றும் அரிவாளையும் கைப்பற்றினர். ஏற்கனவே மணிகண்டன் மீது 4 வழக்குகள் உள்ளன. தோவாளையில் மணிகண்டனுக்கு துப்பாக்கி கொடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார் கமிஷ்னர்.












Click it and Unblock the Notifications