திமுகவில் இணைகிறார் ஜான் பாண்டியன்?
மதுரை:
அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு, பின்னர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக மாறி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலித் தலைவரான தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் விரைவில் திமுகவில் ஐக்கியமாகப் போவதாக அவரது கட்சியினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
தமிழக அரசியல் களத்தை சில காலத்திற்கு முன்பு பரபரப்பில் வைத்திருந்தவர் ஜான் பாண்டியன். தேவேந்திர குல முன்னேற்ற அமைப்பை நிறுவி அரசியல் செய்து வந்தார் ஜான் பாண்டியன்.
தென் கோடி மாவட்டங்களில் ஜான் பாண்டியன் அமைப்புக்கு ஓரளவு தொண்டர் கூட்டம் இருந்தது. தனது அமைப்பை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றி, கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முந்தைய சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஆதரவுடன் சென்னை எழும்பூர் தனி தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டார்.
பெரும் ரத்தக்களறி, வன்முறையுடன் நடந்த இந்தத் தேர்தலில் சொற்ப வாக்குகளில் ஜான் பாண்டியன் தோல்வியுற்றார். பரிதி இளம்வழுதி வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் அதிமுகவின் ஆதரவை இழந்தார், அரசியலிலும் ஓரம் கட்டப்பட்டார். இந்த நிலையில், கோவையில் பைனான்சியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜான் பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சேலம் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
ஜான் பாண்டியனின் முத்திரை சுத்தமாக தமிழக அரசியலில் இல்லாமல் போய் விட்ட நிலையில் புதிதாகப் பிறந்த உற்சாகத்துடன் ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, விரைவில் ஜான் பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவுக்கு தாவப் போவதாக செய்திகள் கிடைத்தன. இதற்கான ஏற்பாடுகளை ஜான் பாண்டியனின் மனைவியான வக்கீல் பிரிசில்லா பாண்டியன் செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஜாமீன் கிடைக்காது. அதன் பிறகுதான் விண்ணப்பித்து ஜாமீன் பெற முடியும். தற்போது ஜான் பாண்டியன் சிறையில் அடைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகி விட்டதால் விரைவில் அவரை ஜாமீனில் வெளியே கொண்டு வர பிரிசில்லா பாண்டியன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.
அதிமுக தங்களைக் கைவிட்டு விட்டதால் திமுகவுக்கு சாதகமாக மாற ஜான் பாண்டியன் தீர்மானித்துள்ளாராம். கடந்த சட்டசபைத் தேர்தலில் பிரிசில்லா பாண்டியன் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரமும் செய்தது குறிப்பிடத்தக்கது.
திமுக தரப்பில் முக்கியப் புள்ளி ஒருவரிடம் ஜான் பாண்டியன் தரப்பு பேசி விட்டதாம். திமுக தரப்பிலிருந்தும் ஜான் பாண்டியன் சேருவதற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
ஜான் பாண்டியனை சட்டச் சிக்கல் இல்லாமல் வெளியே கொண்டு வரவும் திமுக தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். இதனால் ஜான் பாண்டியன் விரைவில் வெளியே வருவார், திமுகவில் தனது கட்சியை இணைப்பார், முன்பை விட புதிய உத்வேகத்துடன் அரசியலில் செயல்படுவார் என்ற நம்பிக்கையிலும், உற்சாகத்திலும் ஜான் பாண்டியனின் ஆதரவாளர்கள் உள்ளனர்.
அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தளபதியாக ஜான் பாண்டியன் திகழ்வார் என்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கூறுகின்றனர்.
ஜான் பாண்டியன் குறித்த இந்த புதிய செய்தி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications