மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 இலங்கை மீனவர்கள் விடுதலை
மதுரை:
தூத்துக்குடியில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்கு இலங்கை மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இவர்களை பார்க்க வந்த இலங்கை மீனவர் சங்கத் தலைவர் பெர்னாண்டோ மதுரை சிறை வாசலில் காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
இலங்கை நீர்க்கொழும்பைச் சேர்ந்த சுகதி குமார், ஞானம், தனுசுதிரீன், பிரான்சிஸ் ஆகிய நான்கு பேரும் கடந்த ஜூன் 13ம் தேதி இந்திய கடல் பகுதிக்குள நுழைந்து, தூத்துக்குடி அருகே மீன் பிடித்தனர்.
இதையடுத்து அவர்களை கைது செய்த தூத்துக்குடி போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.
அவர்களுக்கு நான்கு மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று இவர்களின் தண்டனைக் காலம் முடிவடைந்தது. இதையடுத்து நான்கு பேரும் நேற்று காலை விடுவிக்கப்பட்டனர். நான்கு பேரையும் தூத்துக்குடி போலீஸார் அழைத்துக் கொண்டு சென்னை சென்றனர். அங்கு இலங்கை துணைத் தூதரக அதிகாரிகளிடம் நான்கு பேரும் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இவர்களைப் பார்க்கத்தான் இலங்கை மீனவர் சங்கத் தலைவர் பெர்னாண்டோ மதுரை சிறைக்கு வந்திருந்தார். வந்த இடத்தில் சிறைக் காவலருடன் தகராறு ஏற்பட்டு அதில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, பெர்னாண்டோவின் உடல் நேற்று காலை திருச்சியிலிருந்து விமானம் மூலம் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலைப் பெறுவதற்காக 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கூடியிருந்தனர்.
ஆனால் உடலில் மதுரை கரிமேடு காவல் நிலையத்தின் முத்திரை சரியாகப் பதிக்கப்படாததால், விமான நிலைய அதிகாரிகள், உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்தனர்.
இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் போனது. இதைத் தொடர்ந்து கரிமேடு காவல் நிலையத்தில் புதிதாக ஒரு இறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டு அதில் ஆட்சித் தலைவர், ஆர்.டி.ஓ ஆகியோரின் கையெழுத்து பெறப்பட்டு பேக்ஸ் மூலம் கொழும்பு விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னரே பெர்னாண்டோவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications