சிபிசிஐடி போலீசார் தொடர்ந்த வழக்கில் திமுக எம்எல்ஏ விடுதலை !
பெரம்பலூர்
ஜெயங்கொண்டத்தில் நகைக்கடை தாக்கப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ சிவசங்கர் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2003ம் ஆண்டில் ஜெயங்கொண்டத்தில் திமுக நகர தேர்தல் நடைபெற்றபோது பிரபல பேச்சாளர் வெர்றிகொண்டானின் மகன் கருணாநிதிக்கும், குமார் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் தாக்கிக் கொண்டனர். இந்த சண்டையில் ஜெயங்கொண்டம் கடைவீதியில் உள்ள கணபதி சுந்தரம் நகைக்கடை தாக்கப்பட்டது.
அதில் இருந்த 3,000 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து நகைக்கடை அதிபரின் மகன் ராமசந்தின் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டது.
அதில் திமுக எம்எல்ஏ சிவசங்கர், ஜெயங்கொண்டம் ஒன்றிய திமுக செயலாலர் தனசேகர் உட்பட 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் அரசு சாட்சியாக பலர் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என கோரஸாக கூறிவிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த அரியலூர் விரைவு நீதிமன்ற நீதிபதி பரஞ்சோதி போலீசார் குற்றத்தை சரிவர நிருபிக்காததால் திமுகவினரை விடுதலை செய்தார்.
சிபிசிஐடி இவ்வழக்கை சரியாக கையாளதாதால் தான் தோற்றுப் போனதாக பேசப்படுகிறது.