கேரள எம்.பியால் ஏற்பட்ட பரபரப்பு
சென்னை:
ஷார்ஜாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த கேரள எம்.பியின் பையை பாதுகாப்புப் படையினர் சோதிக்க முயன்றதால் ஆத்திரமடைந்த அந்த எம்.பி. கோபத்துடன் சத்தம் போட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவைச் சேர்ந்த எம்.பி. மனோஜ் குமார், ஷார்ஜா -கொச்சி - கோவை - சென்னை விமானம் மூலம் நேற்று அதிகாலை 5.50 மணிக்கு சென்னைக்கு வந்தார்.
அண்ணா பன்னாட்டு முனையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர், மனோஜ்குமார் கொண்டு வந்திருந்த பையை சோதனை போட முயன்றனர்.
ஆனால் அதற்கு மனோஜ் குமார் எதிர்ப்பு தெரிவித்தார். தான் ஒரு எம்.பி. என்று கூறிய அவர் தனது பையை சோதனை போடக் கூடாது என்று கூறினார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த பாதுகாப்புப் படையினர், சர்வதேச விமானத்தில் வரும் பயணிகளின் உடமைகளை பரிசோதித்துப் பார்த்துத்தான் அனுப்ப வேண்டும் என்பது விதிமுறை. எனவே, உங்களது பையை சோதனையிட்டே ஆக வேண்டும் என்றனர்.
இதைக் கேட்டதும் கடுப்பான மனோஜ் குமார், நான் இவ்வளவு சொல்லியும் கேட்காமல் சோதனை போட வேண்டும் என்பதா. இதுகுறித்து நான் நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவேன். பையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று ஆவேசமாக கூறியபடி அங்கிருந்து கிளம்பினார்.
இதைப் பார்த்ததும் குழம்பிப் போன அதிகாரிகள், பையை சோதனை போடாமல் எம்.பியிடம் கொடுத்து மன்னிப்பும் கோரினர். அதன் பின்னர் தனது பையை வாங்கிக் கொண்டு விடுவிடுவென அங்கிருந்து கிளம்பிச் சென்றார் மனோஜ்குமார்.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.