லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
திருவள்ளூர்:
கூடுதல் பளு ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி ரூ. 50,000 லஞ்சம் கேட்டு மிரட்டிய இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, மதுரவாயல் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சீதாராமன். இவர் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஒரு லாரி, கூடுதல் சுமையை ஏற்றிக் கொண்டு வந்தது. இதையடுத்து லாரியை தடுத்து நிறுத்திய சீதாராமன், அதன் டிரைவரிடம் ரூ. 50,000 லஞ்சம் கேட்டார். பணம் கொடுத்தால் வழக்கு போடாமல் விட்டு விடுவதாக கூறினார்.
இதையடுத்து லாரி டிரைவர் தனது உரிமையாளரை தொடர்பு கொண்டு இன்ஸ்பெக்டர் பணம் கேட்பதாக தெரிவித்தார்.
லாரி உரிமையாளர் உடனடியாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவலைத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை உதவி ஆணையர் நடராஜன் போலீஸ் படையுடன் விரைந்தார்.
லாரி உரிமையாளரிடம் பணத்தைக் கொடுத்து இன்ஸ்பெக்டரிடம் நடராஜன் அனுப்பி வைத்தார். அவரும் பணத்தை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார். இதையடுத்து மறைந்திருந்த போலீஸார், சீதாரமானைக் கைது செய்தனர்.