மதுரை அருகே கலவரம் - பலர் காயம்
மதுரை:
மதுரை அருகே திருமங்கலத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.
திருமங்கலம் அருகே உள்ளது உரப்பனூர் பஞ்சாயத்து. இதன் தலைவராக இருப்பவர் பாஸ்கர சேதுபதி. இதே பஞ்சாயத்தில் கவுன்சிலராக இருப்பவர் பழனி. இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. அடிக்கடி இரு தரப்பு ஆதரவாளர்களும் மோதிக் கொள்வது வழக்கமாம்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பள்ளக்காய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அங்கு நடந்த கோவில் திருவிழாவில் பாஸ்கர சேதுபதியை அழைத்து கெளரவித்தனர்.
இதனால் பழனி தரப்பு ஆத்திரமடைந்தது. இதையடுத்து நேற்று உருட்டுக் கட்டைகள், இரும்புக் கம்பிகள் உள்ளிட்டற்றுடன் பள்ளக்காய்பட்டிக்குச் சென்ற அவர்கள் அங்கிருந்தவர்களைத் தாக்கினர்.
இதையடுத்து சேதுபதியின் ஆதரவாளர்கள், பழனியின் ஆட்களைத் திருப்பித் தாக்கினர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல மாறியது. ஆளாளுக்கு தாறுமாறாக தாக்கிக் கொண்டனர்.
இந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பள்ளக்காய்பட்டியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.