நைஜீரியா புறப்பட்டார் மன்மோகன்
டெல்லி:
ஐந்து நாள் ஆப்பிரிக்க பயணமாக இன்று நைஜீரியத் தலைநகர் அபுஜாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் புறப்பட்டுச் சென்றார்.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2வது இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்க மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். இதேபோல நைஜீரியாவுக்கும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
முதலில் நைஜீரியாவில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக இன்று காலை டெல்லியிலிருந்து நைஜீரியத் தலைநகர் அபுஜாவுக்கு பிரதமர் புறப்பட்டுச் சென்றார். புதன்கிழமை அவர் தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெறும் 2வது இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்க மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.
முன்னதாக டெல்லியிலிருந்து கிளம்பும் முன்பு மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில், நைஜீரிய அதிபர் அலாஜி உமரு மூசா யாராதுவின் அழைப்பின் பேரில் நான் நைஜீரியா செல்கிறேன். ஆப்பிரிக்காவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு நைஜீரியா.
மேற்கு ஆப்பிரிக்காவின் தலைமை நாடாக அது திகழ்கிறது. ஆப்பிரிக்க யூனியனிலும் நைஜீரியா முக்கிய நாடாகும். காமன்வெல்த், அணி சேரா நாடுள், ஜி-77 மற்றும் ஐ.நா.வில் நைஜீரியா முக்கியப் பங்கு வகிக்கிறது. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பிலும் நைஜீரியாவுக்கு முக்கியப் பங்கு உள்ளது.
இந்தியாவைப் போலவே நைஜீரியாவும் ஒரு வளரும் நாடாகும். எனவே இந்தியா சந்திக்கும் அனைத்துப் பொதுப் பிரச்சினைகளையும் நைஜீரியாவும் சந்திக்கிறது.
நைஜீரியாவின் பொருளாதர வளர்ச்சியில் அங்குள்ள இந்தியர்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்பது பெருமை தரும் விஷயமாகும் என்று கூறியுள்ளார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications