'சேது'வுக்கு 'கேப்டன்' ஆதரவு!
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை தேமுதிக ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், அனைத்து கட்சியினரும் ஆதரிக்க வேண்டுமென்றும் அறிக்கை விடுத்துள்ளார்.
ஆபத்து யாரால், எப்போது ஏற்பட்டுள்ளது என்பது தான் இப்போதைய கேள்வி. அரசுகள் மேற்கொள்கின்ற திட்டத்தை எதிர்கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் மூலம் தடுப்பது எளிதல்ல.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து பலர் போராட்டம் நடத்தியும் வெற்றி பெற முடியவில்லை என்பதே இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். ஆகவே முதலமைச்சர் கருணாநிதி எதிர்பார்க்கின்ற ஆபத்து மத்திய அரசின் மூலம் ஏற்பட வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றம் மூலம் உருவாக வேண்டும்.
இன்னும் 3 மாதங்களில் மத்திய அரசின் இரண்டாவது மனுவை பெற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. மத்திய அரசு அவசர அவசரமாக முதல் மனுவை திரும்ப பெற்று 3 மாத காலத்திற்குள் இந்து மதத்தினர் மனம் புண்படாத வகையில் 2வது மனுவை அளிக்க உச்சநீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுள்ளது.
இதன் விளைவாக மத்திய அரசு அரசியல் நெருக்கடியை சந்திக்கவுள்ளது.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்பிக்கள் முக்கியமா அல்லது வட மாநிலங்களை சேர்ந்த 400 எம்பிக்கள் முக்கியமா என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சேது சமுத்திரத் திட்டம் பற்றி மத்திய அரசு காலதாமதம் செய்யுமானால் அத்தகைய சூழ்நிலை ஏற்பட முதலமைச்சர் கருணாநிதியை தவிர வேறு யாரும் காரணமில்லை.
சேது சமுத்திரத் திட்டத்திற்காக சட்டமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானத்தைக் கொண்டு வந்து தன்னுடைய அணியை பலப்படுத்திக் கொள்ளவும் அவர் தயங்க மாட்டார். இந்து மதத்திற்கு நான் விரோதி அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் கருணாநிதிக்கு உள்ளது. இல்லையெனில் அவர் செய்துள்ள கோவில் திருப்பணிகளின் நீண்ட பட்டியலை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?.
தேமுதிகவை பொறுத்தவரையில் இந்த அரசியல் சூழ்ச்சிக்கு நாங்கள் பலியாக மாட்டோம். அதே நேரத்தில், தேமுதிக சேது சமுத்திரத் திட்டத்தை வரவேற்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications