பள்ளிகளில் செல்போன்களுக்குத் தடை
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு அரசு தடை விதிக்கவுள்ளது. விரைவில் இதுதொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
மாணவர்களிடையே செல்போன்கள் மூலம் ஆபாச படங்களை அனுப்புவதும், ஆபாச எஸ்.எம்.எஸ்.களை பரிமாறிக் கொள்வதும் அதிகரித்து வருவதாக சிபிசிஐடி போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி சென்னையில் சிலரைக் கைது செய்தனர்.
இதையடுத்து பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு அரசுக்கு சிபிசிஐடி பரிந்துரைத்தது.
மேலும் பாமக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும் செல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கலாம் என யோசனை தெரிவித்திருந்தன.
கர்நாடகத்தில் தற்போது பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவியர் செல்போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திலும் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன்களைப் பயன்படுத்த தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பான முடிவை முதல்வர் கருணாநிதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.