கலர் டிவி: முற்றுகையிட்ட மக்கள்-தப்பியோடிய தலைவி!
கன்னியாகுமரி:
தமிழக அரசின் இலவச கலர் டிவி கேட்டு பஞ்சாயத்துத் தலைவியை மக்கள் முற்றுகையிட்டனர்.
கன்னியாகுமரி அருகே உள்ளது கரியமாணிக்கபுரம் கிராமம். இங்கு நேற்று தமிழக அரசின் இலவச தொலைக்காட்சி வழங்கும் விழா சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமையில் நடந்தது.
இதில் இந்த கிராமத்தைச் சேர்ந்த 10 பேருக்கு மட்டும் அமைச்சர் கலர் டிவிகளை வழங்கினார். மற்றவர்களுக்கு கரியமாணிக்கபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கலர் டிவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மக்கள் அங்கு குவிந்தனர். ஆனால், மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அப்பகுதியை சேர்ந்த 300 பேருக்கு மட்டுமே கலர் டிவி வழங்கப்பட்டது. இதனால் டிவி கிடைக்காத அந்த பகுதி மக்கள் ஆத்திரமடைந்து பஞ்சாயத்து தலைவி சொர்ணத்தாயை முற்றுகையிட்டனர்.
ஆனால் அவர்களிடம் இருந்து நைசாக தப்பிய சொர்ணத்தாய் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.