ஆயுத பூஜை: நாடு முழுவதும் கொண்டாட்டம்
சென்னை:
நாடு முழுவதும் ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அலை மகள், மலை மகள் மற்றும் கலை மகளை வணங்கி கொண்டாடும் விழாதான் நவராத்திரி. ஒவ்வொரு தேவியருக்கும் 3 நாட்கள் என முறை வைத்துக் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் கடைசி மூன்று நாட்ளை கலைமகளான சரஸ்வதியை வணங்குவார்கள்.
விழாவின் 9வது நாளான இன்று ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் நடத்தி மக்கள் கொண்டாடுகின்றனர்.
தொழில் நகரங்களான சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, சேலம், ஓசூர் போன்ற இடங்களில் மக்கள் வெகு விமரிசையாக ஆயுத பூஜையைக் கொண்டாடி வருகின்றனர்.
ஆயுத பூஜையை முன்னிட்டு தொழில் நிறுவனம் வளம் பெற படையல் போடுவதற்கு தேவையான தேங்காய், பழம், பொரி, சுண்டல், பூக்கள், மாலைகள், வாழைப்பழம், போன்ர பூசை பொருட்கள் விற்பனை நேற்று முதலே களைகட்டியிருந்தது.
ஆயுத பூஜையை முன்னிட்டு கல்வி நிறுவனங்கள், வங்கிகள், தொழிற்சாலைகள், வாகனங்கள் விற்பனை செய்யும் இடங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவிலில் வட மாநில மக்கள் பங்கேற்ற தாண்டியா நடன நிகழ்ச்சி நடந்தது. இதேபோல மாநிலத்தின் பல பகுதிகளிலும் தாண்டியா நிகழ்ச்சிகள் நடந்தன.
கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற உப்பிலியப்பன் வெங்கடாசலபதி திருக்ேகாவிலில் தங்கத் தாமரை பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வணங்கினர்.
நாளை விஜயதசமி தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.