தீர்ப்பு நகல் ரெடி - மீண்டும் சிறை செல்கிறார் சஞ்சய் தத்
மும்பை:
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கான தீர்ப்பு நகர் தயாராகி விட்டதால், நடிகர் சஞ்சய் தத் மீண்டும் சிறையில் அடைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து சஞ்சய் தத் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சஞ்சய் தத்திடம் தீர்ப்பு நகல் இன்னும் வழங்கப்படாததால், அவருக்கு இடைக்கால ஜாமீன் அளித்தது.
தீர்ப்பு நகல் கைக்குக் கிடைக்கும் வரை சஞ்சய் தத் ஜாமீனில் இருக்கலாம். தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் அவர் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் 20ம் தேதி இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் சஞ்சய் தத். இந்த நிலையில் இதுவரை அவருக்கு தீர்ப்பு நகலை மும்பை தடா நீதிமன்றம் வழங்காமல் இருந்தது. தற்போது தீர்ப்பு நகலைத் தயாரிக்கும் பணி முடிந்து விட்டது.
இதையடுத்து ஜாமீனில் விடுதலையாகியுள்ளவர்களை நீதிமன்றத்திற்கு வரவழைத்து தீர்ப்பு நகல் வழங்கப்பட்டது. அப்போது சஞ்சய் தத் தவிர 13 பேர் மட்டும் நீதிமன்றத்திற்கு வந்தனர். சஞ்சய் தத்தை நாளை ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாளை அவருக்கு தீர்ப்பின் நகல் தரப்படும். இதையடுத்து மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்படுவார். இதையடுத்து வழக்கமான ஜாமீன் கோரி அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications