பயங்கரவாத நாடாக மாறி வரும் பாகிஸ்தான்!!
டெல்லி: பயங்கரவாதிகளின் புகலிடமாக, பயங்கரவாதிகளின் நாடாக பாகிஸ்தான் மாறி வருகிறது. உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடாகவும் பாகிஸ்தான் மாறியுள்ளதாக அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் என்ற அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் அமைப்பு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினர் பெருமளவில் முறைகேடுகளில் ஈடுபடும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
ராணுவ ஆட்சி தொடருவதையே அவர்கள் விரும்புகின்றனர். எனவே வேறு யாரும் (முஷாரப் தவிர) ஆட்சியைக் கைப்பற்றி விடாமல் தடுக்க பெருமளவில் முறைகேடுகளில் புலனாய்வுத்துறையினர் ஈடுபடுவார்கள்.
பாகிஸ்தான் பொதுத் தேர்தலால் அந்நாட்டில் ஜனநாயகம் தழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. மாறாக அரசியல் கட்டமைப்பு பெருமளவில் சீர்குலையும். எதிர்க்கட்சிகள் பலவீனமடைவார்கள்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான், வசிரிஸ்தான் பகுதிகளில் தீவிரவாதிகள் மேலும் பலமடைவார்கள். இவர்களால் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் கேள்விக்குறியாகும்.
வசிரிஸ்தான் ஏற்கனவே சர்வதேச பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. இது இன்னும் வலுப்பட்டு பயங்கரவாதிகளின் தலைமையிடமாக மாறும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம், பலுசிஸ்தான் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் மிரட்டலாக மாறும்.
தற்போதைய நிலையில் உலகிலேயே மிகவும் பயங்கரமான நாடாக பாகிஸ்தான் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் நல்லுறவு: பாக்.
இதற்கிடையே, கடந்த 60 ஆண்டுகளில் தற்போதுதான் இந்தியாவுடன் நல்லுறவு நிலவுவதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகம்மது சாதிக் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மிகவும் மெதுவாக நடந்து வந்த போதிலும், கடந்த 60 ஆண்டுகளில் தற்போதுதான் இந்தியாவுடன் நல்ல உறவு நிலவுகிறது.
இரு நாடுகளும் இதுவரை இல்லாத அளவுக்கு சுமூக உறவுடன் காணப்படுகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால பிரச்சினைகள், அணு ஆயுத கட்டுப்பாடு உள்ளிட்டவற்றில் மேலும் கவனம் செலுத்தினால் உறவு மேலும் வலுப்படும்.
இரு நாட்டு உள்நாட்டு விவகாரங்கள், குறிப்பாக தீவிரவாத தாக்குதல்களால் அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது என்றார் அவர்.
பாகிஸ்தானுக்கு 25 பெல் ஹெலிகாப்டர்கள்
இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 25 பெல் 412 ரக ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக இந்த ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
ஹெலிகாப்டர்களை பாகிஸ்தானிடம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க தூதர் ஆன்னி பேட்டர்சன் பேசுகையில், பாகிஸ்தானுடன் இணைந்து தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்க தீவிரமாக ஈடுபட்டுள்ளதை வெளிக்காட்டும் வகையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளுக்கு எதிராக வலுவடைவது, பாகிஸ்தானுக்கு மட்டுமல்லாது அமெரிக்காவின் தீவிரவாத தடுப்பு முயற்சிகளுக்கும் பலம் கூட்டும். இப்பிராந்தியத்தில் நிலைத்தன்மை ஏற்பட அது உதவும்.
பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் ராணுவ உதவி நீண்ட காலத் திட்டமாகும் என்றார்.
கடந்த 2004ம் ஆண்டு பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே 235 மில்லியன் டாலர் ராணுவ உதவித் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் உருவானது. இதன் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தின் பலத்தைக் கூட்ட அமெரிக்கா பல வழிகளிலும் உதவி செய்யும்.
தற்ேபாது பெல் ரக ஹெலிகாப்டர்களை பாகிஸ்தான் ராணுவம் குத்தகை அடிப்படையில் அமெரிக்காவிடமிருந்து பெற்றுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை இயக்குவது குறித்த பயிற்சி, தொழில்நுட்ப உதவிகளையும் அமெரிக்கா வழங்கும்.