பாஷா உள்ளிட்ட 70 பேருக்கு நாளை தண்டனை அறிவிப்பு
கோவை: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாஷா உள்ளிட்ட 70 பேருக்கு தனி நீதிமன்றம் நாளை தண்டனை விவரத்தை வெளியிடவுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 60 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அல் உம்மா தலைவர் பாஷா, அவரது மகன் சித்திக் அலி, தம்பி நவாப் கான், பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 168 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
கோவை சிறை வளாகத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இறுதியில் 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
158 குற்றவாளிகளில் சாதாரண குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட 76 பேருக்கு தண்டனை விவரம் வெளியிடப்பட்டு விட்டது. அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
கொல, கூட்டுச் சதி, ஆயுதக் கடத்தல், ஆயுதம் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட பாஷா, நவாப்கான், அன்சாரி உள்ளிட்ட 70 பேருக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படவுள்ளது.
நாளை காலை நீதிபதி உத்திராபதி முன்பு 70 பேரும் ஆஜர்படுத்தப்படுவர். பின்னர் ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்து அவர்களுக்கான தண்டனையை நீதிபதி அறிவிப்பார்.
பாஷா உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படவுள்ளதால், கோவை நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகர எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர வாகனக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications