3வது அணியுடன் பேச்சு: இடதுசாரிகளுக்கு மொய்லி கண்டனம்
ஹைதராபாத்: அணு சக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணியுடன் பேச்சு நடத்தி வரும் நிலையில், அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், 3வது அணியுடன் இடதுசாரிகள் பேச்சு நடத்தியிருப்பது தவறானது என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் இடதுசாரிக் கட்சிகள் திடீரென டிராக் மாறி 3வது அணி பக்கம் திரும்பியுள்ளன. கடந்த 2 நாட்களாக 3வது அணித் தலைவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தான் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இது காங்கிரஸ் கட்சியை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லி நேற்று ஹைதராபாத் வந்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் தெரிவித்துள்ள கவலைகள் குறித்து ஆராய கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரு சுற்று பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் 3வது அணித் தலைவர்களுடன் இடதுசாரித் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பது தேவையற்றது, துரதிர்ஷ்டவசமானது என்றார்.
இதற்கிடையே, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு தயார் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு தயங்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் விவாதம் நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றார்.
ஆனால், வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் மட்டுமே நடத்தப்பட வேண்டும். வெறுமனே விவாதம் நடத்துவது என்பது பயன் தராது என பாஜக கோரி வருவது குறிப்பிடத்தக்கது.-












Click it and Unblock the Notifications