கோவை சிறுவர் சிறையில் இருந்து 12 பேர் தப்பியோட்டம்
கோவை: கோவை சிறுவர் சிறையில் வார்டனைத் தாக்கிவிட்டு 12 சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர். இதில் 4 பேர் மட்டும் பிடிபட்டுள்ளனர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. இங்கு 53 சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு சாரங்கபாணி (வயது 45) என்பவர் சிறை வார்டனாக உள்ளார். நேற்று இரவு சிறையின் உள்பகுதியில் இருந்த தண்ணீர் குழாயை சில சிறுவர்கள் வேண்டுமென்றே உடைத்துள்ளனர். இந்த நீர் சிறுவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் தண்ணீர் புகுந்தது.
இதையடுத்து வார்டன் அந்த அறைக்குள் சென்றார். அப்போது மின்சார வினியோகத்தை நிறுத்திய சிறுவர்கள் வார்டன் சாரங்கபாணியின் முகத்தில் போர்வையால் சுற்றி அவரைத் தாக்கி கீழே தள்ளினர்.
அவர் சுதாரித்து எழுவதற்குள் 12 சிறுவர்கள் கதவை திறந்து கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு சாரங்கபாணி தெரிவித்தார். இதையடுத்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தரப்பட்டு போலீசார் உடனடி ரோந்து மற்றும் கண்காணிப்பு வேட்டையில் இறங்கினர்.
இதில் இரவு 12 மணியளவில் காந்திபுரம் பஸ் நிலையத்தில் வைத்து கார்த்திக், மனோஜ்குமார், சிவமணி, பிரபாகரன ஆகிய 4 பேரை காட்டூர் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
தப்பியோடிவிட்ட மேலும் 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தப்பிய சிறுவர்களில் சுள்ளான் என்பவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவன் ஆவான். இன்னொருவனான பிரபாகரன் ஏற்கனவே 3 முறை சிறையில் இருந்து தப்பி ஓடி பிடிபட்டவன்.












Click it and Unblock the Notifications