அதிமுகவிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ஜெ மறுவாழ்வு
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக் கட்சியின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள், பிரமுகர்கள் பலரை மீண்டும் கட்சியில் இணைத்துள்ளார் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
அதிமுகவினர் ஆங்காங்கே கூண்டோடு விஜய்காந்தின் தேமுதிகவில் ஐக்கியமாகி வருவது அதிகரித்து வருகிறது.
இந் நிலையில் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த வேலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த உமா விஜயகுமார், ஓ.ஆர்.சம்பத், கே.மனோகரன், ஆறுமுகம், சூளை செல்வம், சுந்தரவள்ளி, ரெங்கநாதன், மனோகரன், ஜி. ஆறுமுகம் ஆகியோர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுகிறார்கள்.
அதே போல திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி, சண்முகம், கடலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ராஜா,
வட சென்னை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மங்கை ரகுபதி மேலும் கோவை, திருச்சி, தேனி மாவட்டங்களில் நீக்கி வைக்கப்பட்டிருந்த நிர்வாகிகள் சிலரும் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும், கடிதம் மூலமும் மன்னிப்பு கோரி தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டி இவர்கள் கேட்டுக் கொண்டதால் இன்று முதல் மீண்டும் உறுப்பினர்களாக அதிமுகவில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.