தேவர் நூற்றாண்டு விழா-அரசு கொண்டாட தடை இல்லை
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறி விட்டது.
ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி என்ற அமைப்பின் அமைப்பாளர் சிம்சன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 100வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக வருகிற 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் கமுதி தாலுகாவில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் வருகிற 30ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முத்துராமலிங்கத் தேவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் தலைவராகவே செயல்பட்டார். எனவே அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவது சட்டவிரோதமாகும். மேலும் கல்வி நிறுவனங்களுக்கு இத்தனை நாட்கள் விடுமுறை விட்டிருப்பதும் சட்டவிரோதமானதாகும். எனவே இரண்டுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ராமசுப்ரமணியன் ஆகிேயார் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்ட நிலையில் தடை விதிப்பது சரியாக இருக்காது என்று வாதிட்டார். மேலும், முக்கிய தலைவர்களின் நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாடுவதில் தவறில்லை என்றும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதிகள், முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று உத்தரவிட்டனர். பின்னர் இதுகுறித்து அரசுத் தரப்பில் விளக்கம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 30ம் தேதிக்கு தள்ளி வைத்தது.












Click it and Unblock the Notifications