கோவைகுண்டு வெடிப்பு: மேலும் 6 பேருக்கு ஆயுள்!
கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இன்று மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மொத்தம் 30 பேருக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
1998ம் ஆண்டு நடந்த கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அல் உம்மா தலைவர் பாஷா கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 168 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதில் 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
158 குற்றவாளிகளில் சாதாரண குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட 76 பேருக்கு முதல் கட்டமாக தண்டனை விவரம் வெளியிடப்பட்டது. இதில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் ஜாமீனில்
விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
இந் நிலையில் கொலை, சதி, ஆயுதக் கடத்தல், ஆயுதம் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட 70 பேருக்கான தண்டனை விவரம் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.
நேற்று பாஷா, அன்சாரி உள்ளிட்ட 31 பேருக்கு தண்டனை விவரங்களை நீதிபதி உத்திராபதி அறிவித்தார். இதில் பாஷாவுக்கு ஆயுள் தண்டனையும், அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பாஷாவின் தம்பி நவாப்கான், மகன் சித்திக் அலி உள்ளிட்டோரும் ஆயுள் தண்டனை பெற்றனர்.
இந் நிலையில் இன்று 30 பேருக்கான தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தார். இதில் ஆறு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். மேலும் 3 பேருக்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
இந்த வழக்கில் அப்ரூவர் ஆன மைசூர் வெடிமருந்து வியாபாரி ரியாசுல் ரகுமான் உள்ளிட்ட மீதமுள்ள 5 பேருக்கும் நாளை தண்டனை அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
ஆவேசத்தில் கத்திய குற்றவாளி:
சலீம் என்பவருக்கு நீதிபதி தண்டனையை அறிவித்தபோது, சலீம் ஆவேத்துடன் பேசினார். அவர் கூறுகையில்,
நம் நாட்டில் முஸ்லீம் சமுதாய மக்களே தண்டிக்கப்படுகிறார்கள். சங் பரிவார் அமைப்பினர் தண்டிக்கப்படுவதில்லை. அதனால்தான் இமாம் அலி போன்றோர் உருவாகிறார்கள். அந்த இடத்தில் நானும் இருப்பேன். முஸ்லிம் சமுதாயத்தினருக்கு தண்டனை வழங்குவதால் முஸ்லிம் சமுதாயத்தை ஒன்றும் செய்ய முடியாது. இது போன்ற சம்பவத்தை மீண்டும் நடத்துவோம் என்றார். அவரை போலீசார் அமைதிப்படுத்தினர்.
நீதிபதி தனது தீர்ப்பை வாசித்துக் கொண்டிருந்தபோதே யாகூப், சபீ ஆகிய இரு குற்றவாளிகளும் நீதிபதிக்கு தங்களது முதுகைக் காட்டியபடி பிரார்த்தனையின் ஈடுபட ஆரம்பித்தனர்.
அப்போது பேசிய நீதிபதி, நீதிமன்றத்துக்கு பின் புறத்தைக் காட்டுவது தவறு தான். ஆனால், பிரார்த்தனை என்ற நல்ல செயலைத் தான் அவர்கள் செய்கின்றனர். இதனால் நீதிமன்றத்தில் அதை பெரிதுபடுத்தப் போவதில்லை என்றார்.