கத்தியால் அறுத்துக் கொல்வோம் - பெனாசிருக்கு அல்-கொய்தா மிரட்டல்
இஸ்லாமாபாத்: கத்தியால் ஆட்டை அறுப்பது போல அறுத்துக் கொலை செய்வோம் இதற்காக கத்தியுடன் உங்களை பின் தொடர்ந்து எங்களது வீரர்கள் கிளம்பியுள்ளனர் என பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான பெனாசிர் பூட்டோவுக்கு அல் கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் பெனாசிர் பூட்ேடா நாடு திரும்பினார். ஆனால் நாடு திரும்பினால் அவரை தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் கொலை செய்வோம் என அல் கொய்தா அமைப்பினரும், தலிபான் தீவிரவாதிகளும் எச்சரித்திருந்தனர்.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் பெனாசிர் நாடு திரும்பினார். ஆனால் அவருக்கு வரவேற்பு அளித்து நடத்தப்பட்ட ஊர்வலத்தின்போது நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 136 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டுள்ள பெனாசிர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அல் கொய்தா அமைப்பு தனக்கு புதிய கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை கொலை செய்வதற்காக கத்தியுடன் பலரை அனுப்பி வைத்திருப்பதாக அல் கொய்தாவிலிருந்து மிரட்டல் வந்துள்ளது.
ஆட்டை அறுப்பது போல உங்களையும் (பெனாசிர்), உங்களது வழக்கறிஞர் பரூக் நாயக்கையும் அறுத்துக் கொலை செய்வோம். இதற்காக கத்தியுடன் பலர் கிளம்பியுள்ளனர்.
எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து நான் பயப்படவில்லை. பாகிஸ்தான் மக்கள் எனக்கு துணை இருப்பார்கள். எனவே எந்தவித அச்சத்தோடும் நான் இருக்கப் போவதில்லை. தொடர்ந்து மக்களை சந்திக்கப் போகிறேன். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன்.
எனது கூட்டங்களின்போது ஊர்வலங்கள் நடத்துவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறினார் பெனாசிர்.
அல் கொய்தாவின் இந்த புதிய மிரட்டல் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications