நரிக்குறவப் பெண்ணுக்கு சரமாரி அடி - 5 பேருக்கு அபராதம்
மலப்புரம்: மதுரையைச் சேர்ந்த நரிக்குறவப் பெண்ணை ஈவு இரக்கமின்றி தாக்கிய ஐந்து பேருக்கு கேரள மாநில மனித உரிமை ஆணையம் தலா ரூ. 15,000 அபராதம் விதித்துள்ளது.
அக்டோபர் 8ம் தேதி மலப்புரம் மாவட்டம் எடப்பல் என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பெண் தனது மகளின் கழுத்தில் கிடந்த சங்கிலியைக் காணவில்லை என்றும், அங்கு நின்று கொண்டிருந்த 3 நரிக்குறவப் பெண்கள் மீது சந்தேகமாக இருப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து மதுரையைச் சேர்ந்த ஜோதி மற்றும் அவருடன் வந்த 2 பெண்களையும் சாலையில் சென்றவர்கள் ஒன்று கூடி கடுமையாக தாக்கினர். பெண்கள் என்று கூட பார்க்காமல் மூர்க்கத்தனமாக தாக்கியதால் 3 பெண்களும் படுகாயமடைந்தனர்.
உடனடியாக விரைந்து வந்த போலீஸார் படுகாயமடைந்த ஜோதி மற்றும் இரு பெண்களையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அம்மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. இதுகுறித்து ஆணைய தலைவரான வி.பி.மோகன் குமார் கூறுகையில், இந்த இரக்கமற்ற செயலில் 5 பேருக்குத் தொடர்பு இருப்பது ஆதாரபூர்வமாக தெரிய வந்துள்ளது. அந்த ஐந்து பேருக்கும் தலா ரூ. 15,000 அபராதம் விதிக்கப்படுகிறது.
இதை பாதிக்கப்பட்ட ஜோதியிடம் வழங்க வேண்டும். வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை இந்தத் தொகை ஜோதியின் தினசரிச் செலவுகளுக்குப் பயன்படும்.
இந்த அபராதப் பணத்தை வருவாய் அதிகாரி ஒருவர் பெற்று அதை வங்கியில் போட்டு பராமரிக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications