நாஞ்சில் சம்பத்தை மதுரை சிறையில் சந்தித்த வைகோ
மதுரை: மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுகவின் கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தை இன்று வைகோ சந்தித்துப் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி குறித்து கீழத்தரமாக பேசினார் நாஞ்சில் சம்பத். இதையடுத்து திமுகவினர் மதிமுக கூட்டத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டதோடு மதிமுகவினரை தாக்கினர். இதில் பலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் சம்பத் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இந் நிலையில் அவரை சந்திக்க மதுரை வந்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
சிறையில் நாஞ்சில் சம்பத்தை சந்தித்த பின் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:
திமுக அரசு எதிர்க் கட்சிகளையும், அரசை எதிர்ப்பவர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளி வருகிறது. தமிழகத்தில் கருத்து சுதந்திரத்துக்கு இடமே இல்லை.
வத்தலகுண்டில் முறையான அனுமதி பெற்று மதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அரசை கண்டித்து நாஞ்சில் சம்பத் பேசினார். ஆனால், அதை தாங்கிக் கொள்ள முடியாத திமுகவினர் 100 பேர் ஆயுதங்களுடன் வந்து மதிமுகவினரைத் தாக்கி பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர்.
மேடையில் இருந்தவர்களும் தாக்கப்பட்டனர். மாவட்டச் செயலாளரின் கார் உடைக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், அருள்சாமி ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாஞ்சில் சம்பத் தாக்கப்பட்டபோது அவர் அந்த இடத்தை விட்டு போக மாட்டேன் என்று உறுதியுடன் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி தொலைபேசி மூலம் எனக்கு தகவல் கிடைத்ததும், நாஞ்சில் சம்பத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினேன். காஞ்சிபுரம் மதிமுக கூட்டத்திலும் இதே போன்று தான் திமுகவினர் தாக்கிய சம்பவம் நடந்தது.
இந்த சம்பவங்கள் நடந்தபோது போலீசார் வேடிக்கை பார்த்துள்ளனர். அதன் பின்னர் தாக்குதல் பற்றி மதிமுகவினர் புகார் கொடுக்க சென்றபோது அதை வாங்காமல் மதிமுகவினர் மீதே வழக்குப் பதிவு செய்து நாஞ்சல் சம்பத்தை கைது செய்துள்ளனர்.
நிலக்கோட்டை நீதிபதியின் வீட்டுக்கே அழைத்து சென்று ரிமாண்ட் செய்து மதுரை சிறையில் அடைத்துள்ளனர். இதுபோன்ற செயல்களால் மதிமுகவை பயமுறுத்திவிட முடியாது.
இதை நாங்கள் பொதுமக்களிடம் விளக்கிச் சொல்வோம். மதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும் சென்னையில் வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். மேலும் தமிழ்நாடு முழுவதும் மதிமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டங்களும் நடத்தப்படும் என்றார் வைகோ.