சம்பத் கைது: நவ.6ல் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்
சென்னை: மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் நவம்பர் 6ம் தேதி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் கடந்த 24ம் தேதி இரவு நடந்த பொதுக் கூட்டத்தில், நாஞ்சில் சம்பத் உரையாற்றிக் கொண்டிருந்த போது, உருட்டுக் கட்டைகள், இரும்புக் குழாய்கள், பெட்ரோல் குண்டுகளோடு உள்ளே நுழைந்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை அடித்து விரட்டியதோடு, நாஞ்சில் சம்பத்தையும், மதிமுக நிர்வாகிகளையும் தாக்கியுள்ளனர்.
இது திட்டமிட்டு நடந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை இதுவரை போலீஸார் கைது செய்யவில்லை.
சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், தக்க பாதுகாப்பு கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதி உத்தரவின் பேரில் நாஞ்சில் சம்பத் மதுரை மத்திய சிறையிலிருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நாஞ்சில் சம்பத் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்து ஜனநாயக உரிமைகளை காக்க அடுத்த மாதம் 6ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
நாஞ்சில் சம்பத் தாக்கப்பட்ட வத்தலகுண்டு பகுதியில், அடுத்த மாதம் 13ம் தேதி கண்டன பொதுக் கூட்டம் நடைபெறும். இதில் வைகோ பங்கேற்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.