தமிழகத்துக்கு புயல் ஆபத்து நீங்கியது-கன மழை தொடரும்
சென்னை: தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த புயல் சின்னம் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது.
வங்கக் கடலில் தாழ்வு நிலையாக பரவியிருக்கும் இந்த மண்டலம் வட மேற்கு திசை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டதால் தமிழகத்துக்கு விடுக்கப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சிறப்பு செய்திக் குறிப்பில்,
வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரத்தின் மீது இந்த தாழ்வு மண்டலம் பரவியுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆந்திரத்திலும் தமிழகத்திலும் இடியுடன் கூடிய மிக பலத்த பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்துக்கு புயல் அபாயம் நீங்கினாலும் கன மழை தொடரவுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் ஆந்திரத்தின் தென் பகுதிகளிலும் மழை கொட்டும்.
இதற்கிடையே மதுரை, வேலூர், கடலூர், திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்த மழை கொஞ்சம் நின்றுள்ளது.
கன மழையால் வைகை அணையின் நீர் மட்டம் 65.68 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 4,995 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 1,241 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த அணையின் கொள்ளவு 71 அடியாகும்.
அதே போல முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டமும் 135 அடியை எட்டியுள்ளது.
மதுரையில்....
தொடர் மழையால் மதுரை அவனியாபுரம் அருகே சாமநத்தம் கிராமத்தில் குடிசை
மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்தது. சுமார் 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
கள்ளந்திரி அருகே செம்பனூர் கண்மாய்க்கரையில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. அது அங்குள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் புகுந்தது.
ராமநாதபுரத்தில்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் பல கண்மாய்கள் உடைந்துவிட்டன. முதுகுளத்தூரில் 78 மி.மீயும், கமுதியில் 61.5 மி.மீயும் மழை பதிவாகியுள்ளது. புயல் சின்னம் காரணமாக ராமேசுவரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில்...
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 115.05 அடியாக உயர்ந்தது.
புதுச்சேரி...
புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழையால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மண்ணாடிப்பட்டு புது நகரில் 3 பேரின் வீடுகள் இடிந்து விழுந்தன.












Click it and Unblock the Notifications