தேவர் ஜெயந்தி விழா-கருணாநிதி காரில் வருகை, ஜெ. ஹெலிகாப்டரில்..
மதுரை: நாளை நடக்கவுள்ள முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு ஜெயந்தி விழாவில் முதல்வர் கருணாநிதியும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் பங்கேற்கின்றனர்.
முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு ஜெயந்தி விழாவும், 45வது குரு பூஜையும் அவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கவுள்ளது.
இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளர்.
ரயில் மூலம் மதுரை செல்லும் கருணாநிதி நாளை காலை அங்கிருந்து கார் மூலம் பசும்பொன் செல்கிறார். அங்குள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் கருணாநிதி, பின்னர் தமிழக அரசின் சார்பில் நடக்கும் முத்துராமலிங்க தேவர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த விழாவுக்கு செய்தித்துறை அமைச்சர் பரிதிஇளம் வழுதி தலைமை தாங்குகிறார். நூற்றாண்டு விழா மலரையும் வெளியிடும் கருணாநிதி பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
மாலையில் மதுரை சாத்தமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் மணி மண்டபத்தை கருணாநிதி திறந்து வைக்கிறார்.
மதுரை விளாச்சேரியில் பரிதிமாற் கலைஞர் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாகக்கப்பட்டுள்ளது. இதை நாளை மறுதினம் காலை கருணாநிதி திறந்து வைக்கிறார். மாலை மதுரை தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மருதுபாண்டியர் சிலையை கருணாநிதி திறந்து வைக்கவுள்ளார். பின்னர் அங்கிருந்து சேலம் புறப்பட்டு செல்கிறார்.
ஜெயலலிதா:
அதே போல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நாளை அஞ்சலி செலுத்துகிறார்.
நாளை விமானம் மூலம் மதுரை வரும் ஜெயலலிதா அங்கிருந்து காரில் சிவகங்கை மாவட்டம் பூவந்தி செல்கிறார். பூவந்தியில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் 100 அடி உயர தேவர் சிலை அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஜெயலலிதா பங்கேற்கிறார். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
பின்னர் காரில் மதுரை விமான நிலையம் வரும் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டரில் பசும்பொன் செல்கிறார். பின்னர் மதுரை வந்து விமானத்தில் சென்னை திரும்புகிறார்.
கருணாநிதி, ஜெயலலிதா வருகையையொட்டி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் திமுகவினரும் அதிமுகவினரும் போட்டி போட்டுக் கொண்டு வரவேற்பு தோரணங்கள், கொடிகளைக் கட்டியுள்ளதோடு மாபெரும் போஸ்டர்களையும் ஒட்டியுள்ளனர்.
மூன்று மாவட்டங்களிலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.