ஆந்திராவில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து: 4 பேர் பலி, 18 பேர் மீட்பு
நெல்லூர்: ஆந்திராவில் நெல்லூர் அருகே பேருந்து ஒன்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த 4 பேர் பலியாகிவிட்டனர். 18 பேரை போலீசார் மீட்டனர். காணாமல் போன 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் அம்மாநிலத்தின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லூரில் இருந்து கதிரிக்கு நேற்று முன்தினம் அரசு பேருந்து ஒன்று சென்றது. இதில் 25 பேர் பயணம் செய்தனர்.இந்த பேருந்து செர்லோபள்ளியில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது.
இந்த காட்டாற்று வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட பேருந்தில் இருந்தவர்களை காப்பாற்ற அப்பகுதி கிராம மக்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
பேருந்தில் இருந்தவர்களை அப்பகுதியை சேர்ந்த சீனிவாசலு என்ற போலீஸ்காரர் உயிரை துச்சமாக கருதி தைரியமாக பேருந்தில் ஆபத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டார்.
சீனிவாசலுவின் துணிச்சலை பார்த்தவுடன் அப்பகுதியை சேர்ந்த ஏட்டு மல்லிகார்ஜூனா, அல்லாபக்ஷா ஆகியோரும் உடன் சென்றனர்.
கடைசியில் பேருந்தில் பயணம் செய்த 25 பேரில் 18 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் மீட்கச் சென்றவர்களில் சீனிவாசலு மட்டும் உயிருடன் திரும்பினார். உடன் சென்ற மல்லிகார்ஜூனா, அல்லாபக்ஷா ஆகியோர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இதே போன்று பேருந்தில் இருந்த கேசவாச்சாரி, வசந்தகுமாரி ஆகியோரும் பலியாகிவிட்டனர்.
பேருந்தில் மீதமுள்ள 5 பேரையும், மீட்பு பணிக்கு சென்ற இருவரையும் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
தன்னுடைய உயிரை பணயம் வைத்து 18 பேரை கயிறு மூலம் காப்பாற்றிய காவலர் சீனிவாசலுவை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.












Click it and Unblock the Notifications