பிரமோத் மகாஜன் மீது தம்பி பிரவீண் பரபரப்பு புகார்
மும்பை: சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜன் குறித்து, அவரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தம்பி பிரவீண் மகாஜன் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
பாஜகவின் இளம் தலைவர்களில் முக்கியமானவராக விளங்கியவர் பிரமோத் மகாஜன். கடந்த ஆண்டு மும்பையில் உள்ள அவரது வீட்டில் வைத்து, தம்பி பிரவீண் மகாஜனால் சுட்டுக் கொல்லப்பட்டார் பிரமோத்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பிரவீண் மகாஜன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மும்பை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கை நீதிபதி எஸ்.பி. தவேரே விசாரித்து வருகிறார்.
தற்போது பிரவீண் மகாஜன் வாக்குமூலம் கொடுத்து வருகிறார். முதல் நாள் வாக்குமூலம் அளித்தபோது தான் பிரமோத் மகாஜனை சுடவில்லை என்று கூறியிருந்தார் பிரவீண். நேற்று 2வது நாளாக அவர் வாக்குமூலம் அளித்தார். அப்போது பிரமோத் மகாஜனின் தனிப்பட்ட குணங்கள் குறித்து அவர் பரபரப்பு குற்றச்சாட்டுக்களைக் கூறத் தொடங்கினார்.
இதனால் கோர்ட் ஹாலில் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. இதையடுத்து பிரவீண் மகாஜனின் வாக்குமூலத்தை நிறுத்திய அரசு வக்கீல் நிதீன் பிரதான், பிரவீண் மகாஜன் கூறும் புகார்களால், அதனுடன் தொடர்புடையவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம். அவர்களுக்கு மன உளைச்சல் மற்றும் பிற சிரமங்கள் ஏற்படலாம். எனவே பிரவீண் மகாஜனின் வாக்குமூலத்தை ரகசிய வாக்குமூலமாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று நீதிபதிக்கு கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அதை எதிர்த்த பிரவீணின் வக்கீல் ஹர்ஷத் பாண்டா, பிரவீண் பல உண்மைகளை வெளிப்படுத்த விரும்புகிறார். எனவே இதை ஓபன் கோர்ட்டில்தான் கூற அனுமதிக்க வேண்டும். உண்மைகள் வெளி வர வேண்டும் என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பின்னர் பிரவீண் மகாஜனின் வாக்குமூலத்தை ரகசிய வாக்குமூலமாக பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனால் பிரமோத் மகாஜன் குறித்து பிரவீண் மகாஜன் கூறிய பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் ரகசிய வாக்குமூலமாக, நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டன.
இருப்பினும் பிரமோத் மகாஜனின் தனிப்பட்ட கேரக்டர் உள்ளிட்டவை குறித்து பிரவீண் மகாஜன் பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலத்தில் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications