ரைஸ் மில் புகைக் கூண்டு இடிந்து 6 பேர் பலி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே அம்மன்கோவில் என்ற இடத்தில் அரிசி ஆலையின் 75 அடி உயர புகைக் கூண்டு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவகிரி, அம்மன்கோவிலில் வெங்கடாஜலபதி ரைஸ் மில் என்ற அரிசி ஆலை உள்ளது. இங்கு புதிதாக 75 அடி உயரத்தில் புகைக் கூண்டு கட்டப்பட்டு வந்தது. இந்த புகைக் கூண்டை வெறும் செங்கற்கள் மற்றும் செம்மண்ணை வைத்து கட்டி வந்தனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக புகைக் கூண்டு கட்டும் பணி நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று மழை இல்லாததால் மீண்டும் பணி தொடங்கியது.
அப்போது மாலையில் திடீரென புகைக் கூண்டு சடசடவென சரிந்து நொறுங்கி விழுந்தது. இதில் கட்டுமானத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து தீயணைப்புப் படையினர், போலீஸார் விரைந்து வந்தனர். பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் 6 பேரை உயிரற்ற உடல்களாகத்தான் மீட்க முடிந்தது.
மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விடிய விடிய மீட்புப் பணிகள் நடந்தன. இந்த சம்பவம் குறித்து தாசில்தார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications