சென்னை அழைத்து வரப்பட்டார் கிருஷ்ணசாமி
சென்னை: காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, சென்னைக்கு இன்று அழைத்து வரப்பட்டார்.
முதுகுளத்தூர் அருகே ஒரு கும்பல் வழிமறித்து வேல் கம்புகளால் தாக்கியதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி படுகாயமடைந்தார்.
இதையடுத்து அவரை மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. தொடர்ந்து அங்கேயே அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
சற்று உடல் நலம் தேறிய நிலையில், அவரை சென்னைக்குக் கொண்டு வந்து மேல் சிகிச்சை தர அவரது குடும்பத்தினர் விரும்பினர். இதையடுத்து இன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து கிருஷ்ணசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து அவர் பிற்பகல் 12.45 மணிக்கு விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆம்புலன்ஸில் பலத்த பாதுகாப்புடன் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட கிருஷ்ணசாமியுடன் அவரது மகன் விஷ்ணு பிரசாத், மகள் செளம்யா அன்புமணி மற்றும் டாக்டர்கள் குழுவும் வந்தனர்.
அதன் பின்னர் விசேஷமாக வரவழைக்கப்பட்ட இந்தியன் விமானத்தில் கிருஷ்ணசாமி ஏற்றப்பட்டு சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். சென்னை வந்து சேர்ந்ததும் நேராக அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு போகப்பட்டார் கிருஷ்ணசாமி.
முன்னதாக மதுரையில் விஷ்ணுபிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், தந்தையின் உடல் நலம் நிலையாக இருப்பதாகவும், அவர் வேகமாக தேறி வருவதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications