தீபாவளி: ஆம்னி பஸ் கட்டணம் கிடுகிடு உயர்வு
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்ல ரயில்கள், அரசுப் பேருந்துகளில் கூட்ட நெரிசல் நிலவுவதாலும், டிக்கெட்டுகள் இல்லாததாலும், தனியார் ஆம்னி பேருந்துகள் பல மடங்கு அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி விட்டன.
சென்னை நகரில் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் வசித்து வருகிறார்கள். பணி நிமித்தம் இவர்கள் சென்னையில் வசிக்கிறார்கள்.
தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. அதனால் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் தொடர்ந்து 4 தினங்கள் சொந்த ஊரில் இருந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமைதான் ஊர் திரும்பத் திட்டமிட்டுள்ளனர்.
தென் மாவட்டங்களுக்கான வழக்கமான ரயில்களில் ஏற்கனவே டிக்கெட்டுக்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் காலியாகி விட்டது. அரசுப் பேருந்துகளிலும் கூட டிக்கெட்டுகள் கிடைக்காத நிலை.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சென்னை-மதுரை செல்லும் அரசு விரைவு பேருந்தின் டிக்கெட்டுகளை சில இடைத்தரகர்கள் மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு ரூ.600 வரை விற்கிறார்களாம்.
இந்த இடைத்தரகர்களின் செயல்களுக்கு போக்குவரத்து கழக ஊழியர்களும் துணை போவது தான் கொடுமையிலும் பெரும் கொடுமை.
இதனால் தனியார் ஆம்னி பேருந்துகளை மட்டுமே நம்ப வேண்டிய நிலையில் தென் மாவட்ட மக்கள் உள்ளனர். இதை வைத்து, தனியார் ஆம்னி பேருந்துக்காரர்கள் டிக்கெட் கட்டணங்களை தாறுமாறாக உயர்த்தி வசூல் வேட்டையில் குதித்துள்ளனர்.
சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு ரூ.600 வரை டிக்கெட்டுகள் விற்கப்படுகிறதாம். சென்னையிலிருந்து நெல்லை செல்ல ரூ.800ம், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல 1,000 ரூபாய்க்கும் மேலாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதாம்.
அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகள் விடப்படுவதாக கூறினாலும், அதுகுறித்து பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து ஊழியர்களை தொடர்பு கொண்டு ஏதாவது தகவல்களை கேட்டால் அடிக்காத குறையாக எரிந்து விழுகிறார்களாம்.
இதனால் பயணிகளின் இந்த அவல நிலைக்கு அரசு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
அப்பாவி ஜனங்கள் எப்போதாவதுதான் இதுபோல சொந்த ஊர்களுக்குச் செல்கிறார்கள். அந்த சமயத்தில் இப்படி பணத்தைப் பிடுங்கும் கொடூர செயலில் னியார் ஆம்னி பஸ்காரர்கள் ஈடுபடுவதை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி, வெளியூர்க்காரர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வழி செய்ய வேண்டும் என தென் மாவட்டக்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications