ரயில் பெட்டிகளில் சிதறிய டீசல் - 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் டீசல் நிரப்பியபோது, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் டீசல் தெறித்து விழுந்தது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர். கவனக்குறைவாக இருந்ததாக 2 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று விழுப்புரம் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. நள்ளிரவில் வந்த அந்த ரயில் முதலாவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டது.
அப்ேபாது என்ஜினில் டீசல் நிரப்பப்பட்டது. டீசல் நிரப்பிய பின்னர் ரயில் கிளம்பியது. அப்போது சற்று வேகமாக ரயில் கிளம்பியதால் அந்த அதிர்வில், டீசல் குழாயிலிருந்து டீசல் சிதறி ரயில் பெட்டிகள் மீது விழுந்து தெறித்தது.
மொத்தம் 8 பெட்டிகளில் டீசல் சிதறியது. டீசல் மழை போல கொட்டியதால் பயணிகள் பீதியடைந்தனர். இதையடுத்து ரயிலை 2வது பிளாட்பாரத்திற்கு கொண்டு சென்றனர்.
டீசல் விழுந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் வெளியே அழைத்து வரப்பட்டனர். அதில் டீசலை நுகர்ந்த சிலர் மயக்கமடைந்திருந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் உடைகளும் உடனடியாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர் பயணிகள் வேறு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். டீசல் சிதறிய 4 பெட்டிகள் மாற்றப்பட்டு வேறு பெட்டிகள் இணைக்கப்பட்டு மங்களூர் எக்ஸ்பிரஸ் பின்னர் கிளம்பிச் சென்றது.
ஒரு என்ஜினுக்கு டீசல் நிரப்பிய பின்னர், அது போன பிறகுதான் அடுத்த ரயிலுக்கான டீசலுடன் ஊழியர்கள் தயாராக வேண்டும். ஆனால் இதில் கவனக்குறைவாக இருந்ததால்தான் இந்த சம்பவம் நடந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
இதுதொடர்பாக கந்தவேல், சண்முகம் ஆகிய இரு ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.