என்னை அழிக்க துடிக்கிறார்கள் - விஜயகாந்த்
மதுரை: எனக்கு இடைஞ்சல் கொடுத்து, என்னை அழிக்க வேண்டும் என்று சிலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரையில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தைச் (வாண்டையார் அணி) சேர்ந்த 5,000 பேர் தேமுதிகவில் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவில் விஜயகாந்த் பேசியதாவது,
எனக்கு எல்லா வழியிலும் இடைஞ்சல் கொடுப்பதிலேயே சிலர் குறியாக இருக்கிறார்கள். என்னை அழிக்க வேண்டும் என்று சிலர் துடித்துக் கொண்டு இருக்கின்றனர். அதற்காக என் மீது வருமான வரித்துறையினரை சோதனை என்ற பெயரில் ஏவி விட்டனர்.
இந்தியாவில் 31 சதவீதம் ஏழைகள் இருப்பதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். கவர்ச்சி திட்டங்கள் தேவையில்லை, வளர்ச்சி திட்டங்கள் தான் வேண்டும். அரசுக்கு தொலைநோக்கு பார்வை வேண்டும்.
திமுக ஆட்சியில் பிரச்சனைகள் தான் அதிகம். எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்தனர். அதனால் அவர் கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
எனக்கும் அவரை போல தொல்லை கொடுக்கின்றனர். தேமுதிக தொண்டர்கள் தவறான வழியில் செல்ல மாட்டார்கள். அவர்களை நல்வழியில் நடத்திச் செல்வேன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்போம். தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். எனவே தேர்தலை சந்திக்க தயாராக இருங்கள் என்றார் விஜயகாந்த்.