இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 900 பேட்டரிகள் பறிமுதல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 900 பேட்டரிகளை கடலோர காவல்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த சில வருடங்களாக பீடி பண்டல்கள், அலுமனிய கட்டிகள் மற்றும் பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. கடலோர காவல் படையின் தீவிர ரோந்து காரணமாக கடத்தல் சம்பவங்கள் தற்போது வெகுவாக குறைந்துவிட்டன.
இந்நிலையில் நேற்று பாம்பனில் தெற்கு கடற்கரை கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் வேணுபோபால் ரோந்து சென்றார். அப்போது இடிந்து போன கட்டிடத்தில் இரண்டு பெட்டிகள் இருந்துள்ளது. அவை குறித்து விசாரித்த போது அதற்கு உரிமை கொண்டாடி யாரும் வரவில்லை.
இந்த நிலையில் அந்த பெட்டியை எடுத்து போலீசார் சோதனை செய்த போது அதில் டீயூரோ செல் பேட்டரிகள் இருந்தது தெரியவந்தது. அந்த பேட்டரிகள் பாம்பன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
அந்த பெட்டியில் மொத்தம் 900 பேட்டரிகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ. 15,000 ஆகும்.
இந்த பேட்டரிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்யவும், டார்ச்லைட்டுகளுக்கும், வாக்கி டாக்கிகளுக்கும் பயன்படுத்தலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.